இந்தியாவின் மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட முதல் அரசர் யார் தெரியுமா? இராஜ ராஜ சோழன் இல்லையாம்

இந்தியா உலகின் மிகவும் தொன்மையான வரலாறு கொண்ட மிகப்பெரிய நாடாகும். இந்திய வரலாறு சக்திவாய்ந்த ஆட்சியாளர்களாலும் பேரரசுகளாலும் நிறைந்துள்ளது. இருப்பினும், இந்தியாவின் முதல் சக்திவாய்ந்த மன்னர் யார் என்ற கேள்வி எழும்போது, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு பதில் இருக்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகப்பெரிய அரசர் என்றால் அது இராஜ ராஜ சோழன்தான். ஆனால் ஒட்டுமொத்த இந்திய வரலாறை பார்க்கும் போது, எளிய பின்னணியிலிருந்து வந்த ஒரு சாதாரண இளைஞர், இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் முதன்முறையாக ஒரே பேரரசின் கீழ் ஒன்றிணைத்தார்.

The First King Who Rule the Largest United Part of India

இந்தியாவின் முதல் அரசர் யார்?

மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியரே, இந்தியாவின் முதல் அரசர் என்று வரலாற்றாசிரியர்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை ஒரே ஒருங்கிணைந்த பேரரசாக ஒன்றிணைத்த முதல் பேரரசரும் இவர்தான், மேலும் இவரது ஆட்சியே இந்திய வரலாற்றின் பொற்காலத்தின் தொடக்கமாகவும் அமைந்தது.

சந்திர குப்தா மௌரியர் யார்?

சந்திரகுப்த மௌரியர் கி.மு. 340-இல், பாடலிபுத்திரத்தில் (நவீன பாட்னவில் ) பிறந்தார். அவரது குழந்தைப் பருவம் மிகவும் கடினமானதாக இருந்தது. இளம் வயது சந்திரகுப்தரை சாணக்கியர் ஒரு அசாதாரணமான நபராகக் கருதினார். அவரிடம் இயல்பான தலைமைத்துவத் திறனும், கூர்மையான அறிவுக்கூர்மையும், எதற்கும் அஞ்சாத துணிச்சலும் இருப்பதை அவர் கண்டறிந்தார். பண்டைய உலகின் மிகச்சிறந்த கல்வி மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தட்சசீலத்திற்குச் சாணக்கியர் அவரை அழைத்துச் சென்றார்; அங்கே சந்திரகுப்தருக்குப் போர்க்கலைகள், நிர்வாகம் மற்றும் ஆட்சிமுறை ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டன.

வெற்றிக் கூட்டணி

சந்திரகுப்தர்-சாணக்கியர உருவாக்கிய இந்த கூட்டணி, இந்திய வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற கூட்டணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது, சொல்லப்போனால் இந்தியாவை உருவாக்கிய கூட்டணி என்றே இவர்களை சொல்லலாம். சாணக்கியர் சக்திவாய்ந்த அரசராவதற்கான உத்திகளையும் ஞானத்தையும் வழங்கினார். அதேசமயம் சந்திரகுப்தர் அவற்றைச் செயல்படுத்தத் தேவையான அசாத்திய துணிச்சலையும் உறுதியையும் வழங்கினார்.

சந்திரகுப்தர் எவ்வாறு இந்தியாவின் முதல் மன்னரானார்?

இந்தியா என்பது கடந்த காலத்தில் எண்ணற்ற சிறிய ராஜ்ஜியங்களாகவும் குடியரசுகளாகவும் பிரிந்திருந்த ஒரு நாடாகத் திகழ்ந்தது. அவற்றுள் மிகவும் செல்வாக்கு மிக்கதாகத் திகழ்ந்தது நந்தப் பேரரசாக விளங்கியது. இந்த பேரரசு நந்த வம்சத்தைச் சேர்ந்த 'தன நந்தர்' எனும் மன்னரால் ஆளப்பட்டு வந்தது. கடுமையான வரிவிதிப்பு மற்றும் சர்வாதிகாரப் போக்குடைய ஆட்சிமுறை ஆகியவற்றின் காரணமாக, தன நந்தரின் ஆட்சி மக்களிடையே மிகுந்த வெறுப்பைப் பெற்றிருந்தது.

சாணக்கியருக்கு, தன நந்தருக்கும் ஏற்கனவே பகை இருந்தது. மேலும், அவரின் பேரரசை அளிக்க அவர் விரும்பினார். அந்த இலக்கை அடைவதற்குச் சந்திரகுப்தரே மிகச்சிறந்த போர்வீரர் என்று அவர் கருதினார். அவ்விருவரும் இணைந்து ஒரு கூலிப்படையைத் திரட்டி, நந்தப் பேரரசின் மீது படையெடுத்தனர். அவர்களின் முதல் முயற்சி தோல்வியடைந்தது. இருப்பினும், அவர்கள் மனம் தளராமல் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தங்கள் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்திப் புது உத்வேகத்துடன் மீண்டும் களமிறங்கினர். இந்த முறை அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றிபெற்றனர். ஏறத்தாழ கி.மு. 322-ஆம் ஆண்டில், சந்திரகுப்தர் தன நந்தனைத் தோற்கடித்து, நந்தப் பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றி, மௌரியப் பேரரசை உருவாக்கினார்.

மௌரியப் பேரரசு

மகதத்தைக் கைப்பற்றிய பிறகு, சந்திரகுப்தர் அத்துடன் நிற்கவில்லை. அவர் தனது பேரரசை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் முறையாக விரிவுபடுத்தினார். அலெக்சாண்டரின் படையெடுப்பிற்குப் பிறகு இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த கிரேக்க ஆட்சியாளர்களை அவர் விரட்டியடித்தார். கி.மு. 305-ல், அலெக்சாண்டரின் வலிமையான வாரிசுகளில் ஒருவரான முதலாம் செலூக்கஸ் நிகேட்டருடன் போரிட்டு அவரையும் தோற்கடித்து, தற்போதைய ஆப்கானிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானின் ஒரு பகுதியை அவருக்கு வழங்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்.

சந்திர குப்த மௌரியரின் இறுதிக்காலம்

சந்திரகுப்தர் சுமார் 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.அதன்பின் அவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை செய்தார். அவர் தனது அரியணை, பேரரசு மற்றும் அனைத்து உலகப் பற்றுகளை துறந்து, ஒரு சமணராக மாறினார். தனது இறுதி நாட்களை, இன்றைய கர்நாடகப் பகுதியில் ஒரு துறவியாகக் கழித்தார். அவருக்குப் பின் அவரது மகன் பிந்துசாரர் மௌரிய பேரரசின் ஆட்சியாளராக பொறுப்பேற்றார்.

சமண மரபின்படி, சந்திரகுப்தர் தெற்கு நோக்கிப் பயணித்து, சமண சமயக் கோட்பாடுகளுக்கு இணங்க, ஒரு குகைக்குள் தன்னைத்தானே பட்டினியாக கிடந்து உயிர்துறந்தார் என்று நம்பப்படுகிறது. இந்நிகழ்வு, பெங்களூரிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதும், சமண சமயத்தின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றுமான 'ஸ்ரவணபெலகோலா' எனும் நகரில் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.

சந்திர குப்த மௌரியர் பெரிய நிலப்பரப்பை மட்டும் கைப்பற்றவில்லை. அவர் பல பல்கலைக்கலகங்களையும், கல்வி நிறுவனங்களையும் உருவாக்கினார் மற்றும் வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கினார். மேலும் இந்தியத் துணைக்கண்டத்திற்கு அரசியல் ஒருங்கிணைப்பின் தொடக்கப்புள்ளியாக அவர் விளங்கினார்.

Story first published: Monday, April 6, 2026, 15:55 [IST]
Desktop Bottom Promotion