இந்தியாவிலேயே இந்த மாநிலத்தில்தான் சொந்தத்திற்குள் திருமணம் அதிகம் நடக்குதாம்... ஷாக் ஆகாதீங்க...!

பல நூற்றாண்டுகளாக சொந்தத்திற்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இந்தியா முழுவதும் நிலவுகிறது. திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக இருக்கிறது. ஒருவரின் இரண்டாம் பாதி வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை தீர்மானிப்பது அவர்களுக்கு கிடைக்கும் வாழ்க்கைத்துணையைப் பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால்தான் கணவன்/மனைவியை தீர்மானிப்பதில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க இரத்த பந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் பரவலாக உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல ஆண்டுகளாக பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும் இன்றும் அந்த பிரச்சினை முடிந்த பாடில்லை.

Tamilnadu Has Highest Marriages Among Blood Relatives

இந்தியாவில் உறவுகளுக்குள் நடக்கும் திருமணம்

சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS-5) அறிக்கையின் படி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த திருமண முறை உள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 28 சதவீதமும், சிக்கிமில் 0.5 சதவீதமும் நடைபெறுகிறது.

Tamilnadu Has Highest Marriages Among Blood Relatives

தமிழநாட்டில் உறவுகளுக்குள் நடக்கும் திருமணம்

சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நான்கு பெண்களில் ஒருவர் இரத்த உறவினரையே திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 28% திருமணங்கள் இரத்த சொந்தங்களுக்குள் நடைபெறுகின்றன. அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 27% திருமணங்கள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஆந்திரா 26 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. விதிவிலக்காக கேரளாவில் வெறும் 4.4% மட்டுமே நடைபெறுகிறது. இந்தியாவின் தேசிய சராசரி 11% ஆகும், ஆனால் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தேசிய சராசரியை விட இருமடங்கு அதிகமாக உள்ளது.

Tamilnadu Has Highest Marriages Among Blood Relatives

இரத்த சொந்த திருமணத்திற்கான காரணங்கள்

இரத்த உறவுமுறை திருமணங்கள் என்பது, பெண்கள் தங்களுக்கு நெருங்கிய சொந்தத்தில் மாமா முறை உள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகும். இந்த திருமணங்கள் அதிகம் நடைபெற காரணம் இங்கு நிலவும் சாதி மற்றும் பரம்பரை பழக்கங்கள்தான். சாதி என்பது கண்ணுக்கு தெரியாததாக இருந்தாலும் அது பல்லாயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு சமூகப் பிரச்சினையாகும். சாதி விட்டு சாதி திருமணம் செய்வதை பெரும்பாலான தென்னிந்திய பெற்றோர் விரும்புவதில்லை. அவர்கள் சாதியின் உட்பிரிவில் கூட திருமணம் செய்ய பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லை. சொத்துப் பிரச்சினைகளும் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது, இரத்த உறவு என்பது சொத்துக்கும், பரம்பரைக்கும் நெருங்கிய தொடர்புடையது.

அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்?

இந்த கணக்கெடுப்பின்படி, இத்தகைய இரத்த பந்த திருமணங்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் 15-19 வயது பெண்களாகும், அவர்களில் 14.7% பேர் இரத்த உறவினரை திருமணம் செய்து கொள்கின்றனர். நகர்ப்புறங்களில் வாழ்வது அல்லது வளர்வது என்பது இரத்த உறவு திருமணங்களின் எண்ணிக்கையில் சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் சொந்தத்திற்க்குள் திருமணம் செய்து கொள்ளும் பெண்களில் 11% பேர் நகர்ப்புறங்களிலும் 10.7% பேர் கிராமப்புறங்களிலும் வசிக்கின்றனர். இப்படி திருமணம் செய்து கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

ஆரோக்கிய பிரச்சினைகள்

இந்த திருமணங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. இரத்த உறவுகளால் பிறக்கும் குழந்தைகள் மரபணு மற்றும் மனநல நோய்களைப் பெறலாம் என்பதைக் காட்டுகின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, இரத்த உறவு கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு சில மருத்துவ அபாயங்கள் உள்ளன. இரு பெற்றோரும் ஒரு பொதுவான மூதாதையரின் மரபணுவை பகிர்ந்து கொள்ளும் போது, தலசீமியா, முதுகெலும்பு தசைச் சிதைவு போன்ற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்து 25% அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Desktop Bottom Promotion