தமிழ் புத்தாண்டில் கண்டிப்பாக இதையெல்லாம் செய்யக்கூடாது.. ஏன் தெரியுமா?

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, புது வருடப்பிறப்பு விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில் தான். வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது ஐதீகம்.

ஆண்டின் முதல் நாள் தொடக்கத்தில் நாம் செய்யும் தானங்கள் நம்மை மென்மேலும் வளர செய்யும். நமக்கு நாம் செய்து கொள்ளும் வேண்டுதல்களை விட மற்றவர்களுக்காக நாம் உதவும் செயல்களில் இறைவனை காணலாம் என்பது நியதி. அதனால் இந்த பதிவில் தமிழ் புத்தாண்டில் செய்ய வேண்டிய தானங்கள் என்ன? என்னென்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

Do s and Dont s You Should Follow on Tamil New Year Day and Why

செய்ய வேண்டியவைகள்

தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தொடங்குகிறது. தமிழ் புத்தாண்டு அன்று இறை வழிபாடுகளில் ஈடுபடுவது சிறப்பு. மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை பூஜை அறையில் வைத்து, அதை புத்தாண்டு அன்று அதிகாலையில் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகின்றது. புத்தாண்டு அன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நல்லது. அப்படி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சாமி கும்பிடலாம்.

தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை படைப்பது தமிழர்களின் பாரம்பரியமான முறையாகும். அன்றைய நாளில் இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்குமாறு உணவானது அமைவது சிறப்பு. பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை. ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற படையலை படைப்பது விசேஷம் ஆகும். அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை அறிய இந்த அறுசுவை உணவு புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு கோடை காலத்தின் துவக்கத்தில் வருவதால்,வெயில் காலத்திற்கு ஏற்ற தானங்களை செய்வது நல்லது.ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்க குடை தானம், செருப்பு தானம், விசிறி தானம் ஆகியவற்றை செய்யலாம். அத்துடன் நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்றவை செய்வதால் உங்களுடைய கர்மாக்கள் அனைத்தும் தீரும். பறவைகளுக்கு, விலங்குகளுக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் வைப்பதும் சிறப்பு.

தமிழ் புத்தாண்டு அன்று கடைக்கு சென்று நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்குவது மென்மேலும் அவைகள் பெருக செய்யும். அப்படி வாங்க முடியாதவ்ரகள் கல்லுப்பு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய மங்கல பொருட்களை வாங்குவதும் குடும்பத்தில் மென்மேலும் லட்சுமி கடாட்சத்தை வளர செய்யும்.

செய்யக்கூடாதவைகள்

தமிழ் புத்தாண்டு அன்று கட்டாயம் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்கக் கூடாது. பொதுவாகவே இந்து மதத்தில் விஷேச நாட்களில் தலையில் எண்ணெய் வைத்து குளிக்க மாட்டார்கள். அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது.

வீட்டில் இருக்கும் ஒட்டடைகளை புத்தாண்டு அன்று அகற்ற கூடாது. வீட்டில் சேகரித்து வைக்கும் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது. புதிய பொருட்களை வாங்கலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை அன்றைய தினம் யாருக்கும் கொடுக்கக் கூடாது. கடனாகக் கூட கொடுக்கக் கூடாதாம்.

மேலும் புத்தாண்டில் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது. கடன் வாங்கவும் கூடாது. தமிழ் புத்தாண்டில் செய்ய வேண்டியவைகளை செய்து, தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து வளமாக வாழ தமிழ் அன்னையை வணங்குவது சிறப்பு.

Desktop Bottom Promotion