ஓரின சேர்க்கையாளர் திருமணம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு என்ன சொல்லி இருக்கிறது தெரியுமா?

ஒரே பாலின திருமணங்கள் இந்தியாவில் பல நடந்துள்ளன. இதற்கு சமூகத்தில் அதிகளவில் எதிர்ப்பும் மிகக்குறைந்த அளவில் ஆதரவும் இருந்துவருகிறது. ஆனால் இந்த ஒரே பாலின திருமணங்கள் சட்டமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் தொடர்பான சட்டங்களை உருவாக்குவது, "உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு அல்ல, அது சட்டமன்றத்தின் செயல்பாடு" என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இது தொடர்பாக, பலர் மனு தாக்கலும் செய்துள்ளனர். இந்த மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது. தலைமை நீதிபதி டி. ஒய் சந்திரசூட், நீதிபதிகள் பி. எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

Same-Sex Marriage Case In The Supreme Court: Here Is What The Central Govt Said In Tamil

இந்த வழக்கு குறித்து, மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பிராமணப் பத்திரத்தை இன்று தாக்கல் செய்தார். அதில், 'காதல், கருத்து சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட நபரின் விருப்பம் ஆகிய உரிமைகள் அனைவருக்கும் உள்ளது. இந்த உரிமைகளில் யாரும் தலையிடுவதில்லை, ஆனால் ஓரினச் சேர்க்கையாளர் திருமண உரிமை என்பது சிக்கலானது, பிரச்சனைக்குரியது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 'ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. இது சமூகத்தில் தவறான மாற்றங்களை ஏற்படுத்தலாம். கிராம புறங்களில் மற்றும் சிறிய நகரங்களில் வசிக்கும் மக்களின் கருத்துக்களையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஓரின சேர்க்கையாளர் திருமண பிரச்சனையில் உச்சநீதி மன்றம் தலையிட வேண்டாம். இது நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுங்கள். மத்திய அரசு பார்த்துக்கொள்ளும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் உரிமைகளை உருவாக்குதல், உறவுகளை அங்கீகரிப்பது மற்றும் அத்தகைய உறவுகளுக்கு சட்டப்பூர்வ புனிதம் அளிப்பது ஆகியவை தகுதிவாய்ந்த சட்டமன்றத்தால் மட்டுமே செய்ய முடியுமே தவிர, நீதித்துறை தீர்ப்பின் மூலம் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அனைத்து மதங்கள், சாதிகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் வேற்று பாலினத்தவர்களிடையே நடக்கும் திருமணத்தை மட்டுமே அங்கீகரிக்கின்றன. சமூக, உளவியல் மற்றும் மத தாக்கங்கள் குறித்து சட்டமன்றம் விவாதிக்க வேண்டும். பிரிவு 246 இன் கீழ், எந்த சமூக உறவுகள் அங்கீகரிக்கப்படும் என்பது சட்டமன்றக் கொள்கையின் ஒரு பகுதியாகும். அதை மக்கள் பிரதிநிதிகள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 18-ம் தேதி (நாளை) விசாரிக்கும். தற்போது, ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் குறித்து சட்டங்களை இயற்ற சட்டமன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு என்று புதிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து மத்திய அரசு கவனத்தை ஈர்த்துள்ளது.

Story first published: Monday, April 17, 2023, 21:00 [IST]
Desktop Bottom Promotion