மதுரை சித்திரை திருவிழா 2023: பக்தர்களின் பாவங்களை போக்க தங்க பல்லக்கில் பவனி வரும் மீனாட்சி!

Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை நகரை "திருவிழா நகர்" என்றும் அழைப்பது உண்டு. ஏனெனில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் மிகப்பெரிய திருவிழா தான் இந்த சித்திரை திருவிழா. இந்த சித்திரை திருவிழா மதுரை மக்களின் மனங்களோடு ஒன்றிய திருவிழா என்றே கூறலாம்.

அக்காலத்தில் இருந்து இன்று வரை சைவ மற்றும் வைணவ மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் வித விதமான பல்லக்கில் பவனி வந்து மக்களுக்கு அருள் புரிவார்.

Madurai Chithirai Thiruvizha 2023: Fourth Day Goddess Meenakshi In Thanga Pallakku

இந்த ஆண்டு ஏப்ரல் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரை திருவிழா நல்ல சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைக்கு 4-வது நாள் மண்டகப்படி மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் இருவரும் தங்க பல்லக்கில் மக்களை காண பவனி வருகின்றனர்.

மதுரை சித்திரை திருவிழாவின் நான்காம் நாள்: தங்க பல்லக்கு பவனி

சித்திரை திருவிழாவின் நான்காம் நாளில் மதுரை மீனாட்சி அம்மனும் அப்பன் சுந்தரேஸ்வரரும் வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி எழுந்தருளுவார்கள். காலையில் சுவாமியும் அம்மனும் கோயிலிருந்து புறப்பட்டு வில்லாபுரத்து பாவற்காய் மண்டபத்தில் தங்குவார். இரவில் அவர்கள் தங்க பல்லக்கில் மதுரை வீதிகளில் வலம் வருவார்கள்.

நான்காம் நாள்: வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி வரலாறு

அந்தக் காலத்தில் அழகப்ப பிள்ளை மற்றும் தானப்ப பிள்ளை என்ற இருவர் இருந்தனர். இவர்கள் இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏகப்பட்ட தொண்டுகளை செய்து வந்தார்கள். அவர்களின் சேவைகளை கண்டு வியந்த பாண்டிய சேனாதிபதி அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் மதுரை மீனாட்சி அம்மனும் அப்பன் சுந்தரேஸ்வரரும் ஒருநாள் எங்க ஊருக்கு வந்து தங்க வேண்டும் அதுவே எங்கள் ஊருக்கு கிடைக்கும் பெரும் பாக்கியம் என்று அவர்கள் கருதினர். அன்று முதல் நான்காம் நாள் வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி திருவிழா நடைபெறுகிறது. அன்று ஒருநாள் மட்டும் அம்மனும் அப்பனும் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் வந்து தங்கி வீதி சுற்றி வருவார். இதை பல ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழாவில் பின்பற்றி வருகின்றனர்.

பக்தர்களின் பாவங்களை போக்க தங்க பல்லக்கில் பவனி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தொண்டுகளை செய்து வந்த அழகப்ப பிள்ளை மற்றும் தானப்ப பிள்ளை இருவரின் ஊர் வில்லாபுரம் ஆகும். இங்கு வில்வ மரங்கள் அதிகமாக காணப்பட்டதால் அந்த ஊருக்கு வில்லாபுரம் என்ற பெயர் வந்தது. அதே மாதிரி முற்காலத்தில் இந்தப் பகுதியில் பாகற்காய் அதிகமாக விளைந்ததாகவும் அதை சமைத்து மீனாட்சி அம்மனுக்கும் அப்பர் சுந்தரேஸ்வரருக்கும் நைவேத்யம் செய்ததாக கூறப்படுகிறது.

அதனால் தான் இந்த மண்டகப்படி வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி என்று அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் ஈசன் பக்தர்களின் பாவங்களை காய்ந்து போகச் செய்து நிவாரணம் அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர். எனவே இந்நன்னாளில் மக்கள் தங்கள் பாவங்களை போக்க மதுரை மீனாட்சி அம்மனையும் அப்பர் சுந்தரேஸ்வரரையும் தங்க பல்லக்கில் தரிசித்து வாருங்கள்.

சம்பந்தர் பாடும் தங்கபல்லக்கு தேவாரம்

"எந்தையீசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்தி
சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்றுகை கூடுவதன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே"- நான்காம் நாள் திருவிழா என்பது நாற்கரணம், நால்வகைத் தோற்றம் என்னும் இவற்றை நீக்குதற் பொருட்டு நிகழ்வதாகும்.

தங்கபல்லக்கு புறப்படும் நேரம்

காலை எழுந்தருளும் நேரம் : 9.00 மணியளவில்
வாகன விபரம் : வில்லாபுரம் செல்லுதல் (அழகப்ப பிள்ளை மற்றும் தானப்ப பிள்ளை வகையறா வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி)
மாலை எழுந்தருளும் நேரம் : 6.00 மணியளவில்
வாகன விபரம் : தங்கப்பல்லக்கு
திருவிழா முடிவுற்று தங்கப்பல்லக்கு கோயிலுக்கு வந்து சேரும் நேரம் இரவு 9.30 மணியளவில் இருக்கும்.

தங்கபல்லக்கு அலங்காரம்

தங்கபல்லக்கில் மதுரை மீனாட்சி அம்மனும், அப்பர் சுந்தரேஸ்வரரும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ மதுரை மாசி வீதிகளில் வலம் வருவார்கள். குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்புறப் பாடல்கள் பாடியும் அம்மனையும் அப்பனையும் வரவேற்பார்கள். மக்கள் தாங்கள் கொண்டு வந்த மலர்கள் மற்றும் பூ மாலைகளை அம்மனுக்கு கொடுத்து அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் பாவங்களை போக்க வேண்டுவார்கள்.

Desktop Bottom Promotion