வீட்டுக்கு 1 கோடி முதல் 50 ரூபாய்க்கு சரக்கு வரை ஒட்டு வாங்க வேட்பாளர்கள் கூறிய கோமாளித்தனமான வாக்குறுதிகள்...

Lok Sabha Election 2024: இந்தியா முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கி விட்டது. திரும்பும் திசைகளெல்லாம் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும், பிரச்சாரங்களும் குவிந்து கொண்டிருக்கின்றன. வழக்கம் போல அரசியல் கட்சி தலைவர்கள் வாக்குகளைப் பெற தங்கள் வானளாவிய வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கிவிட்டனர்.

சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலும், அவற்றில் பல வாக்குறுதிகள் அரசியல் பிழைப்புவாதமாகவும், வெறும் வெற்று வாக்குறுதிகளாகவுமே உள்ளது. அரசியல்வாதிகளும் ஏமாற்றி பழகிவிட்டார்கள், நாமும் ஏமாந்து பழகிவிட்டோம்.

Lok Sabha Election 2024 Weird Election Promises Made in Indian Elections in Tamil

சில சமயங்களில் இந்த வாக்குறுதிகள் எல்லைக் கடந்து வேடிக்கையாகவும், சிரிக்கும் படியும் மாறிய பல வரலாறு உள்ளது. இந்த பதிவில தேர்தல் சுவாரஸ்யத்தை அதிகரித்த வேட்பாளர்கள் அறிவித்த நம்ப முடியாத சில வினோதமான வாக்குறுதிகளைப் பற்றி பார்க்கலாம்.

வங்கிக்கணக்கில் 1 கோடி

15 லட்சத்தையும் தாண்டி ஒரு தமிழ்நாட்டு வேட்பாளர் 1 கோடி வரை மக்கள் காதில் பூ சுற்றினார். இவர் அளித்த வாக்குறுதி போல யாராலும் அளிக்க முடியாது. மார்ச் 2021-ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் மக்களுக்கு நம்ப முடியாத வாக்குறுதிகளை வழங்கினார்.

தமிழகத்தின் தென்மதுரையைச் சேர்ந்த சரவணன் என்ற 34 வயது சுயேட்சை வேட்பாளர், ஐபோன், கார், ஹெலிகாப்டர், ரோபோ, இளம் வாக்காளர்களுக்கு ரூ.1 கோடி, நீச்சல் குளத்துடன் கூடிய மூன்றடுக்கு வீடு அனைத்திற்கும் மேலாக நிலாவில் 100 நாட்கள் விடுமுறை பயணம் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்தார்.

70 ரூபாய்க்கு மதுபானம்

ஆந்திரப் பிரதேசத்தில் 2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கோரும் பாஜகவின் ஆந்திரப் பிரிவுத் தலைவர் சோமு வீரராஜு மாநிலத்தில் மலிவான மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

கடந்த டிசம்பர் 28ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய வீரராஜு, "பாஜகவுக்கு ஒரு கோடி ஓட்டுக் கொடுங்கள், வெறும் 70 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம்" என்றார். மேலும் வருவாய் கூடுதலாக வந்தால், மதுபானத்தின் விலை ரூ.50 ஆக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குழந்தைத் திருமணங்கள் பாதுகாக்கப்படும்

நாட்டின் பல பகுதிகளிலும் குழந்தைத் திருமணத்தை எதிர்த்து பலர் போராடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக அதனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் சோஜாத் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஷோபா சௌஹான், தனது தொகுதியில், தான் வெற்றிப் பெற்றால், குழந்தைத் திருமணங்களில் போலீஸ் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று கூறினார். இந்த வைரலான பேச்சு தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.

காளை மோதி இறப்பவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்படும்

2022 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத் தேர்தலில் சமாஜவாதி வெற்றி பெற்றால் காளைகள் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என உத்திரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் உறுதியளித்தார். இதை அக்கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 28 அன்று வெளியிட்டது.

சைக்கிள் விபத்தில் இறப்பவர்களுக்கு 5 லட்சம்

சமாஜ்வாடி கட்சியின் சின்னம் சைக்கிள் என்பதால், 2022 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சைக்கிள் விபத்தில் இறப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்களிடையே பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, அனைவரும் இந்த அறிவிப்பை ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர்.

ட்ராபிக் பைனை மாநகராட்சியே கட்டும்

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஹெச்எம்சி) தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, நிலுவையில் உள்ள அனைத்து போக்குவரத்துச் சலான்களையும் மாநகராட்சி நிர்வாகம் செலுத்தும் என்று பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் கூறினார்.

10 லிட்டர் பிராந்தி

தமிழகத்தில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஏ.எம்.ஷேக் தாவூத், தான் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், வாக்காளர்களுக்கு மாதந்தோறும் 10 லிட்டர் பிராந்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Desktop Bottom Promotion