இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த அரசர் இவர்தானாம்... இவர் எந்த மாநில அரசர் தெரியுமா?

இந்திய வரலாறு முழுவதும் பல்வேறு அரசர்களும், ராணிகளும் தங்களுக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். சில அரசர்கள் மக்களுக்கு செய்த சேவைகள் மற்றும் நற்பணிகள் மூலம் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கினர், அதேபோல சிலர் தங்களின் முட்டாள்தனத்தாலும், கொடுங்கோல் ஆட்சியாலும் வரலாற்றில் இடம் பிடித்தனர்.

இப்போது நாம் பார்க்கப்போவது இந்திய வரலாற்றில் தன்னுடைய கருணை, பச்சாதாபம் மற்றும் தனது குடிமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை ஆகியற்றால் உயர்ந்த ஆளுமை ஆகியவற்றால் புகழ் பெற்ற ஒரு அரசரைப் பற்றித்தான். அவர்தான் மைசூரின் இருபத்தி நான்காவது மகாராஜாவான நான்காம் கிருஷ்ணராஜ வாடியர் ஆவார், அவர் 1902 முதல் 1940 இல் இறக்கும் வரை ஆட்சி செய்தார். அவர் தனது ராஜ்ஜியத்தின் மக்களின் வாழ்வை மேம்படுத்த கடுமையாக உழைத்தார்.

Krishna raja Wadiyar IV The King Who Laid Foundation for Modern Bengaluru

மகாராஜா கிருஷ்ணராஜ வாடியர் IV

நான்காம் கிருஷ்ணராஜ வாடியர் ஜூன் 4, 1884 அன்று பிரமாண்டமான மைசூர் அரண்மனையில் பிறந்தார். 1895 ஆம் ஆண்டு அவர் தனது 11 வயதில் அரியணை ஏறினார். அப்போது அவரது தாயார் கெம்பனஞ்சம்மன்னி தேவி, மைசூர் மகாராணியாகவும், பின்னர் ராஜ மாதாவாகவும், மைசூர் இராச்சியத்தின் ஆட்சியாளராகவும் இருந்தார். கிருஷ்ணராஜ உடையார்1902 இல் 18 வயதில் முழுப் பொறுப்பையும் ஏற்கும் வரை அவர் இந்த பொறுப்பில் நீடித்தார்.

நான்காம் கிருஷ்ணராஜ வாடியர் மற்ற மன்னர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவராக இருந்தார். அவர் மேற்கத்திய மற்றும் இந்திய கல்வி இரண்டையும் பெற்றார், அவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் ஆர்வம் காட்டவில்லை. அவர் ஆங்கிலம், கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் மொழிகளை கற்றறிந்தார், மேலும் பல கலைகளில் நிபுணராக இருந்தார், அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் கர்சனிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார். லார்ட் கர்சன் கிருஷ்ணராஜ வாடியரின் தொலைநோக்குப் பார்வையால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

மைசூரின் முன்னேற்றம்

நான்காம் கிருஷ்ணராஜ வாடியர் ஆட்சியின் கீழ், மைசூர் இராஜ்ஜியம் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கண்டது, மேலும் உலகின் மிகவும் முற்போக்கான இராஜ்ஜியங்களில் ஒன்றாக மாறியது. அவர் தனது மக்களுக்கு முன்னேற்றத்திற்கான நிறைய வாய்ப்புகளை உருவாக்கினார், மேலும் தீண்டாமையைத் தடைசெய்து எட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு குழந்தைத் திருமணங்களை நிறுத்தினார். விதவை பெண்களுக்கு உதவித்தொகை வழங்கினார், மேலும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக தனது தனிப்பட்ட செல்வத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.60 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

1915-இல் மைசூர் சமூக முன்னேற்ற சங்கத்தை நிறுவி ஆரம்பகால இடஒதுக்கீட்டுக் கொள்கையை உருவாக்கினார். 1918 இல் பின்தங்கிய வகுப்பினரின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாகக் கணக்கிட்ட பிறகு, அவர் பிராமணரல்லாதவர்களுக்கு 25% அரசு வேலைகளை ஒதுக்கினார். அந்த நேரத்தில் இது மிகவும் துணிச்சலான நடவடிக்கையாக பாராட்டப்பட்டது.

தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் கல்வி

கிருஷ்ணராஜ வாடியருக்கு அற்புதமான தொலைநோக்கு பார்வை இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், மைசூர் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக மாறியது. 1905 ஆம் ஆண்டில், பெங்களூரு நீர்மின்சாரத்தைப் பயன்படுத்தி முழுமையாக மின்சாரம் பெற்ற ஆசியாவின் முதல் நகரமாக மாறியது. இது அவருக்கு 'கிருஷ்ணராஜ பூபா, மானே மானே தீபா' என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தது, அதாவது 'ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்த ராஜா'.

கல்வித் துறையில் அவர் விரிவாகப் பணியாற்றினார். 1915 ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது, 12 ஆண்டுகளுக்குள், அதாவது 1927 ஆம் ஆண்டில், மாநிலத்தின் கல்வி பட்ஜெட் ரூ.6.9 லட்சத்திலிருந்து ரூ.46.8 லட்சமாக உயர்ந்தது. இது 8,000 பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவியது.

எதிர்கால சந்ததியினரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த கல்வி கற்க வேண்டும் என்று அவர் விரும்பினார். மைசூர் சமஸ்கிருதக் கல்லூரியை நிறுவுவதற்கு அவர் உதவினார், அவர் சர் சி.வி. ராமனுக்கு தனது ஆராய்ச்சி நிறுவனத்திற்காக 10 ஏக்கர் நிலத்தை வழங்கினார், மேலும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) ஆக பின்னர் மாறுவதற்காக ஜாம்செட்ஜி டாடாவுக்கு 400 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.

இந்தியாவின் பணக்கார அரசர்

நான்காம் கிருஷ்ணராஜ வாடியர் 1940 இல் காலமானார். அந்த காலகட்டத்தில், அவரது சொத்து மதிப்பி தற்போதைய மதிப்பின் படி 57,901 கோடியாக இருந்தது. அவர் எப்போதும் தனது மக்களின் நலனுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த ஒரு மன்னர். அதற்கு கிருஷ்ண ராஜ சாகர் அணை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இது அவர் வழங்கிய நிதியால் கட்டப்பட்டது. அணை கட்ட பணம் தீர்ந்து போன போது, ​​அணையை கட்டி முடிக்க அவர் தனது சொந்த நகைகளை மும்பையில் விற்றார். இன்றும் மில்லியன் கணக்கான மக்களுக்கு சேவை செய்யும் அந்த அணை கிருஷ்ணராஜ வாடியரின் பெருந்தன்மைக்கான சான்று.

Desktop Bottom Promotion