Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா?

Krishna Jayanti 2026: கிருஷ்ண ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்பது இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான இந்துப் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்து மதத்தின் காக்கும் கடவுளான விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பை இந்த பண்டிகை கொண்டாடுகிறது. இந்த பண்டிகையின் கொண்டாட்டத்தின் போது, ​​பக்தர்கள் தங்கள் வீடுகளிலும் கோவில்களிலும் குழந்தை கிருஷ்ணரை வரவேற்று, பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

Krishna Jayanti 2026 Date Significance Puja and Rituals

2026-ஆம் ஆண்டில், கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்படவுள்ளது. இந்தியாவில் நகரத்தைப் பொறுத்து பூஜை மற்றும் விரத நேரங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகிறது?

புராணங்களின் படி, பகவான் கிருஷ்ணர் மதுராவில் தேவகி மற்றும் வசுதேவருக்கு மகனாகப் பிறந்தார். கொடூரமான மன்னன் கம்சனின் ஆட்சிக்காலத்தில், நள்ளிரவு வேளையில் அவரது பிறப்பு நிகழ்ந்தது. தேவகியின் எட்டாவது மகன் தனது அழிவிற்குக் காரணமாக இருப்பான் என்று கம்சனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பகவான் கிருஷ்ணரின் பிறப்பு அனைத்து பக்தர்களுக்கும், அவரை பின்பற்றுபவர்களுக்கும் ஒரு மங்களகரமான தருணமாகக் கருதப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி என்பது நம்பிக்கையின் கொண்டாட்டமாகவும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாகவும் கொண்டாடப்படுகிறது. பல போராட்டங்களுக்குப் பின் கிருஷ்ணர் வசுதேவரால் கோகுலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நந்தர் மற்றும் யசோதையால் வளர்க்கப்பட்டார்.

கிருஷ்ணரின் பிறப்பும், வாழ்க்கையும் மக்களுக்குப் பல பாடங்களையும் கற்றுத் தருகிறது. பகவத் கீதையில் அவர் அர்ஜுனருக்கு கூறிய உபதேசங்கள் மற்றும் அவரது வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம், கடமை, பக்தி, துணிச்சல் மற்றும் அறநெறி ஆகியவற்றை அவர் மக்களுக்குக் கற்பித்தார். எனவே, கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவது என்பது அவரது பிறப்பை மட்டும் கொண்டாடுவதல்ல, அது அவரது போதனைகளையும், வாழ்க்கை முறையையும் கொண்டாடுவதாகும்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் முக்கியத்துவம்

இந்தப் பண்டிகையானது ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. மேலும், ரோகிணி நட்சத்திரத்திற்கும் பகவான் கிருஷ்ணரின் பிறப்பிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. பஞ்சாங்கக் கணக்கீட்டின்படி, 2026-ஆம் ஆண்டில் அஷ்டமி திதி செப்டம்பர் 4-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவில் நிறைவடைகிறது.

பகவான் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாகக் கருதப்படுவதால், கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்களில் நள்ளிரவு நேரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதற்காக பக்தர்கள் காத்திருந்து, கிருஷ்ணரின் பிறப்பு நிகழ்வைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அப்போது குழந்தை கிருஷ்ணரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, புத்தாடை அணிவிக்கப்பட்டு, தொட்டிலில் வைக்கப்படுகிறது. அத்துடன், மணி ஓசை மற்றும் சங்கு முழக்கங்களுக்கு இடையே, பக்தர்கள் பிரார்த்தனைகளையும் கிருஷ்ணரின் திருநாமங்களையும் உச்சரிக்கின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி விரதம்

விரதம் இருப்பதும் கிருஷ்ணா ஜெயந்தியின் மற்றொரு முக்கிய மரபாகும். பக்தர்கள் நாள் முழுவதும் விரதத்தைக் கடைப்பிடித்து, பூஜை முடிந்த பின்னர் விரதத்தை நிறைவு செய்கிறார்கள். முழுமையான விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள், தங்கள் உடல்நிலை மற்றும் குடும்ப வழக்கங்களுக்கு ஏற்ப எளிய ஜென்மாஷ்டமி விரதத்தைக் கடைபிடிக்கலாம்.

இந்தியாவில் ஜென்மாஷ்டமி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் இடத்திற்கு இடம் பெரிதும் மாறுபடுகிறது. வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, மலர்கள், அகல் விளக்குகள் மற்றும் பல்வேறு அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கப்படுகிறது. வீட்டின் நுழைவாயில் முதல் பூஜை அறை வரை அரிசி மாவு அல்லது பிற பாரம்பரியப் பொருட்களைக் கொண்டு குழந்தை கிருஷ்ணரை சிறிய பாதச் சுவடுகள் வரையப்படுகின்றன. வீட்டில் குட்டி கிருஷ்ணரின் வருகையை குறிக்கும் விதமாக இந்தப் பாதச் சுவடுகள் இடப்படுகின்றன.

இந்த நாளில் கோவில்களில் சிறப்புப் பூஜைகள், அபிஷேகம், பஜனைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பக்தர்கள் வெண்ணெய்-கல்கண்டு, பழங்கள், இனிப்புகள் மற்றும் கிருஷ்ணருக்குப் பிடித்தமான பிற பொருட்களைப் படைத்து வழிபடுகின்றனர். மேலும், குழந்தைகள் பெரும்பாலும் கிருஷ்ணர் மற்றும் ராதையைப் போல வேடமணிந்து வருவதால், கொண்டாட்டம் இன்னும் மகிழ்ச்சிகரமானதாக அமைகிறது.

மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில், ஜென்மாஷ்டமிக்கு அடுத்த நாள் 'தஹி ஹண்டி' நிகழ்வுடன் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. 2026-ஆம் ஆண்டில், தஹி ஹண்டி செப்டம்பர் 5, சனிக்கிழமையன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது இளைஞர்கள் மனிதக் கோபுரங்களை அமைத்து, உயரத்தில் தொங்கவிடப்படும் தயிர் அல்லது பிற இனிப்புப் பொருட்கள் நிரப்பப்பட்ட பானையை ஏறி எடுக்கின்றனர்.

வீட்டில் செய்யக்கூடிய எளிய பூஜை

வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாட அதிக சிரமப்படத் தேவையில்லை. முதலில், பூஜையறையைச் சுத்தம் செய்து, ஒரு சுத்தமான மேடையில் கிருஷ்ணரின் சிலை அல்லது படத்தை வைக்க வேண்டும். பின்னர், பூக்கள், ஊஞ்சல் மற்றும் விளக்குகளைக் கொண்டு அறையை அலங்கரிக்க வேண்டும். பழங்கள், பால், வெண்ணெய், கற்கண்டு மற்றும் வீட்டில் செய்த இனிப்புகள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் நள்ளிரவில் பால், தயிர், தேன் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு குழந்தை கிருஷ்ணருக்கு எளிய முறையில் அபிஷேகம் செய்யலாம். சிலைகளுக்குப் புத்தாடை அணிவித்து, பல்வேறு நைவேத்தியங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆரத்தி எடுப்பதோடு, கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிப்பதோ அல்லது பகவத் கீதையின் ஸ்லோகங்களை ஓதுவதோ பூஜையை மேலும் சிறப்பானதாக மாற்றும்.

Story first published: Friday, August 28, 2026, 17:41 [IST]
Desktop Bottom Promotion