குழந்தை வரம் தரும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகையின் சிறப்புகள்...!

கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது. இத்தலம் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப்பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பவர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள ஒவ்வொருவரும் பெண்களுக்கு பிரசவ வலி வரும் போதும் கர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம் தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்தக் காணிக்கையை செலுத்துகிறார்கள். இங்கு தல நாயகராக கற்பக விநாயகர் உள்ளார்.

sri mullaivannathar garbharatsambigai temple

தல வரலாறு

முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகையுடன் வசித்து வந்தார். கருவுற்றிருந்த மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் வெளியே சென்றிருந்தார். அந்தநேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் எனும் முனிவர். ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார். கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இதையறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தார்.

பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள். அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை. ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள். பின்னர் அந்தக் குழந்தைக்கு 'நைதுருவன்' எனப் பெயரிட்டு பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை. இறைவியின் அருளை கண்டு மகிழ்ந்த வேதிகை இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, உலகில் கருத்தரித்தவர்களையும், கருவையும் காப்பாற்றவேண்டும்' என்று வேண்டினாள் என்று தலவரலாறு சொல்கிறது.

அதனால் கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள். காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.

இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18 ஆவது சிவத்தலமாகும் திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப் பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.

இத்திருத்தலத்தில் பிரம்மன், கௌதமர், மன்னர் குசத்துவசன் , சங்குகர்ணன் நிருத்துவ முனிவர் முதலியோர் வாழ்ந்து சிவ பூசை செய்ததாக வரலாறு உள்ளது . முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்ட தலம் ஆதலால் இத்தலம் மாதவி வனம் என்றும் அழைக்கபடுகின்றது. இதனாலே இறைவரும் முல்லைவனநாதர் என்றும் மாதவிவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கோவிலின் முகவரி: அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சன்னதி திருக்கருகாவூர் அஞ்சல், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சையிலிருந்தும் திருவாரூரிலிருந்தும் இக்கோவிலுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளது.

Story first published: Monday, April 15, 2024, 13:00 [IST]
Desktop Bottom Promotion