இன்று ஆனி மாத தேய்பிறை பிரதோஷம்.. சிவனை இப்படி வணங்குங்கள்.. கை மேல் பலன் கிடைக்கும்..!

ஒரு ஆண்டில் வரும் அனைத்து பிரதோஷங்களில் விரதம் இருந்து சிவ பெருமானை வழிபடுபவர்களுக்கு சிவலோகத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிரதோஷ காலத்தில் சிவனை நினைத்து தியானிப்பது சகல தெய்வங்களையும் வழிபட்ட பலனை கொடுக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பிரதோஷம் இன்று... அதிலும் ஆனி மாத தேய்பிறை பிரதோஷம் ஆகும். இன்று ஜூலை 3ஆம் தேதியான புதன் கிழமையில் தேய்பிறையில் பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு ஆகும்...

Aani Month Theipirai Pradosham 2024 Worshiping Lord shiva is good for life

பொன்னையும் பொருளையும் அள்ளி தரும் புதன் பிரதோஷம்

திங்கட்கிழமையில் வருவது சோமவார பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை சனி மகா பிரதோஷம் என்றும் சொல்கிறோம். அதே போல் புதன்கிழமையில் வரும் பிரதோஷமும் அதீத விசேஷமானதாகும். இந்து மத நம்பிக்கையின் படி புதன்கிழமையும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று விரதமிருந்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.

அந்த வகையில் புதன்கிழமையில் வரும் பிரதோஷமானது பதினாறு வகையான செல்வங்களையும் அள்ளித் தரக்கூடியதாகும். திருமணமாகாதவர்கள் புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வேண்டிக் கொண்டு விரதம் இருந்தால் விரைவில் திருமண பாக்கியம் கை கூடி வரும். அது மட்டுமல்ல ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், குடும்ப ஒற்றுமை ஆகிய பாக்கியங்களும் கிடைக்கும்.

தேய்பிறை பிரதோஷம்

தேய்பிறையில் வரக்கூடிய பிரதோஷம் மிகவும் விசேஷமானது. பிரதோஷம் என்றால் பாவத்தை தொலைத்துக் கொள்ளும் வழிபாடு என்பது ஐதீகம் பிரதோஷ வழிபாடு செய்வதால் ஒவ்வொருவரும் தங்களுடைய பாவத்தை தொலைத்துக் கொள்ளும் வழி என நம்பப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் வரும் திரயோதசி திதி எனும் 13ம் நாள் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு சிவா ஆலயங்களிலும் பிரதோஷ நாட்களில் மாலை நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனைகள் செய்யப்படும்.

விரதம் இருக்கும் முறை

ஆனி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். இன்றைய ஆனி தேய்பிறை பிரதோஷம் புதன்க்கிழமையில் வருவதால் மிகவும் விசேஷமானதாகும். ஆனி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.'

தானம் மற்றும் வழிபடும் முறை

பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சனி பகவானால் ஏற்படும் அனைத்து விதமான தொல்லைகளில் இருந்தும் விடுபட வழி பிறக்கும்.

பலன்கள்

பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவ நாமங்களை உச்சரிக்க வேண்டும். தேய்பிறையில் வரும் பிரதோஷம் என்பதால் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து ஈசனை துதிக்கலாம். திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம், வறுமை விலகும், வெற்றிகள் கிடைக்கும், காரிய தடைகள் விலகும்.

Story first published: Wednesday, July 3, 2024, 6:35 [IST]
Desktop Bottom Promotion