சித்திரை முதல்நாள் : கனி காணுதலும்... கை நீட்டம் பெறுதலும்...

By Mayura Akilan

Kani Kanuthal And Kai Neetam Peruthal
தமிழ் வருடப் பிறப்பன்று தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களில் விஷுக்கனி காணல்' என்ற சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர். அதாவது, சித்திரை மாதம் பிறப்பதற்கு முந்தைய தினத்திற்கு முதல்நாள் இரவிலேயே, இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விடுவார்கள்.

பொன், வெள்ளி, பழங்கள்

வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், ஆபரணங்கள், பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களை தயாரித்து, ஒரு மனையின் மீது கோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைப்பர். அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைப்பர்.

மங்கலம் செழிக்கும்

சித்திரை மாதப் பிறப்பன்று அதிகாலை முதன் முதலாக வீட்டிலேயே வயது முதிர்ந்த பெண் எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி கொள்வார். பின்பு அவர், இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார்.

பூஜைக்குரிய தெய்வத்தையும், புத்தாண்டு நிகழ்ச்சிக்காக பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் இனிவரும் நாட்கள் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியும் மங்கலப் பொருள்கள் செழித்தும் இருக்கும் என்பது நம்பிக்கை.

கை நீட்டம் பெறுதல்

இதேபோல் புது வருடப் பிறப்பன்று அன்று, சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்றுப் நாணயம் பெறுவார்கள் இதுவே கைநீட்டம் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு காசு மற்றும் காய், கனிகள் வழங்கப்படுகிறது. செல்வந்தராக இருந்தாலும் பொறுமையாக வரிசையில் நின்று பிரசாதமாகக் கைநீட்டம் பெறுகிறார்கள். கோவிலில் கைநீட்டம் பெற்றால் ஆண்டு முழுவதும் பணம் குவியும்; செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

Desktop Bottom Promotion