சொர்க்கமும்... நரகமும்...

By Maha

இராணுவ வீரன் நோபுஷிகே, தனக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்க்க, ஹகுயன் என்ற குருவை சந்தித்தான். அந்த குருவை சந்தித்து அந்த வீரன், "உண்மையில் சொர்க்கம், நரகம் என்று உள்ளதா?" என்று கேட்டான்.

அதற்கு அந்த குரு "நீ யார்?" என்று வீரனிடம் கேட்டார். அதற்கு "நான் ஒரு இராணுவ வீரன்" என்று கூறினான்.

நீ ஒரு ராணுவ வீரனா! என்று ஆச்சரியத்துடன் அந்த குரு "எந்த ஆட்சியாளர் உன்னை ஒரு பாதுகாப்பு வீரனாக தேர்ந்தெடுத்தது? உன் முகத்தில் ஒரு பிச்சைக்காரன் அம்சம் தெரிகிறது!" என்று அவனைப் பார்த்து கூறினார்.

அதனைக் கேட்டதும் கோபம் கொண்ட அவன், கோபம் தாங்காமல் தனது வாளை எடுத்தான். அதைப் பார்த்த அந்த குரு "ஓ! உன்னிடம் வாள் இருக்கிறதா? இருப்பினும் அந்த வாள் மிகவும் மந்தமாக காணப்படுகிறது. அது என் தலையை துண்டிக்காது" என்று கேலியாக கூறினார்.

இதை கேட்ட வீரனுக்கு, மிகுந்த கோபம் ஏற்பட்டு வாளை எடுத்து வீச முற்பட்டான். அப்போது குரு அவனிடம், "இங்கு தான் நரகத்தின் கதவுகள் திறந்தன!" என்று கூறினார்.

குருவின் வார்த்தைகளைக் கேட்டு வீரன் சற்று சாந்தம் கொண்டு, அவனுடைய ஒழுக்கத்தை அறிந்து மீண்டும் தனது வாளை உறையில் வைத்தான். இப்போது குரு "இங்கு தான் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தன" என்று கூறினார்.

பின் அந்த வீரன், "கோபம் உள்ள இடத்தில் நரகமும், குணம் உள்ள இடத்தில் சொர்க்கமும் உள்ளன" என்பதைப் புரிந்து குருவின் முன் தலை குனிந்து நின்றான்.

Story first published: Thursday, August 9, 2012, 14:04 [IST]
Desktop Bottom Promotion