வீட்டை அழகாக்கும் நிழல் மரங்கள்

By Mayura Akilan

Tree Planting Tips
மரங்கள் மனதிற்கு இதம் தருபவை. வெளியில் அலைந்து திரிந்துவிட்டு வரும் போது வீட்டு வாசலில் நிழல் தரும் மரங்கள் இருந்தாலே அது நம்மை அன்போது வரவேற்பதை போன்றிருக்கும். மர நிழலில் சிறிதுநேரம் நின்றிருந்தாலே நமக்கு ஏற்பட்ட டென்சன் எல்லாம் காணமல் போய்விடும். தூசிகளும், தேவையற்ற அசுத்தங்களும் வீட்டிற்குள் நுழையவிடாமல் மரங்கள் தடுக்கும். எனவே மரங்கள் நடுவது வீட்டின் அழகிற்காக மட்டுமல்ல சுற்றுப்புற சுகாதாரத்திற்கும் ஏற்றது.

நிழல் தரும் மரங்கள்

மரங்கள் சூழ்ந்த இடத்தை சோலை என்பர். சோலையின் அழகை எல்லோரும் விரும்புவார்கள். ஏதாவது ஒரு காரண காரியத்தோடுதான் மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகுந்த இடத்தில் நடப்படுகின்றன. இயற்கைத் தோட்டம் அமைக்கும் போது மரங்களின் பங்கு அதிகம். எங்கும் எப்போதும் கட்டிடங்களையே பார்த்து பார்த்து சலித்த கண்களுக்கு அவைகளோடு பசுமையான மரங்களையும் செடிகளையும் காணும்போது அந்த சலிப்பு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படகிறது. வீட்டை அழகு படுத்தும் மரங்களை மலர் மரங்கள், நிழல் மரங்கள், இலை அழகு மரங்கள் என பிரிக்கலாம்.

மரம் நட ஏற்ற இடம்

மரங்களை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவைகளை நடுவதற்கான இடத்தை தேர்வு செய்வது. பெரும்பாலும் கட்டிடங்களுக்கு அழகூட்டும் மரங்களை நடுவதற்கு முன் அவைகளின் உபயோகங்களுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து நடவேண்டும்.

நிழல் மட்டும் தேவைப்படும் இடங்களில் கட்டிடத்திலிருந்து ஐந்து மீட்டர் இடைவெளி விட்டு மரங்கள் நட வேண்டும். நிழல் மரங்களின் வடிவங்களைப் பொருத்து நிழல் கொடுக்கும் தன்மை அமையும். நல்ல நிழல் பெற கிளைகள் நீளமாகவும் நாற்புறங்களிலும் வட்ட வடிவமாக படர்ந்து வளரும் மரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் நிழல் மரங்கள் அதன் வடிவங்களைப் பொருத்து பல விதமாக பிரிக்கப்படுகின்றன.

மரங்களில் பல வித வடிவங்கள் உள்ளன. அவை கோழி முட்டை வடிவம், உருண்டை வடிவம், தொங்கும் கிளைகளுடையது, குடை வடிவமுள்ளது, கூம்பு வடிவமுள்ளது, நேராக மேல் நோக்கி வளர்வது என பலவகையாக பிரிக்கப்படுகிறது.

வேண்டாத இடங்களை பளிச்சென்று கண்களுக்கு தெரியா வண்ணம் மறைப்பதற்கு மரங்கள் உதவுகின்றன. இதற்காக மரங்களை கூட்டமாக நடும்போது மரங்களின் பலவித வடிவங்களும் , இலை , மலர் ஆகியவைகளின் வண்ணங்களும் கண்களுக்கு புலப்படாமல் செய்து விடுகின்றன.

தூசுகள் தடுக்கப்படும்

பின்புற காட்சிக்காக நடப்படும் மரங்கள் வளர்ந்து முதிர்ந்ததும் அவைகளின் கிளைகள் கட்டத்தில் கூரைக்கு மேலாக இருக்க வேண்டும் இம்மரங்களின் இலைகள் கூரையின் தோற்றத்தை எடுப்பாக காட்டும். கட்டிடத்தின் முன்பக்கமிருந்து பார்க்கும் போது இத்தகைய மரங்களினால் ஒரு பின்புற காட்சி அமைப்பு கிட்டும். உயரமாக , அடர்த்தியாக வளரக்கூடிய இலையுதிர்க்கால மரங்களை பல வரிசைகளில் அடர்த்தியாக நடும்போது காற்றின் வேகம் குறைக்கப்படுகிறது. மேலும் காற்றில் வரும் தூசுகளையும் தடுக்கிறது.

மலர் மரங்கள்

கண்கவர் மலர்களுடன் விநோதமான கிளைகளுடன் கூடிய சிறிய ஊசி இலைகளுடன் கூடிய மரங்களை தனி ஒரு மரமாக நட்டால் அந்த இடத்திற்கு ஒரு அழுத்தம் கிடைக்கிறது. புல் தரையின் ஓரம், கட்டிடத்தின் முன் பக்க ஓரம், மதில் ஓரம் நடப்படும் இத்தகைய மரங்கள் கவர்ச்சியுடன் மிளிரும்.

Story first published: Monday, February 6, 2012, 17:05 [IST]
Desktop Bottom Promotion