சமையலறை பாதுகாவலன் : பளிச் தோற்றம் பார்ப்போரை ரசிக்க வைக்கும்

By Mayura Akilan

Clean Kitchen
சமையலறையில் முக்கியமானவை கைப்பிடி துணிகளும், ஏர்பான் எனப்படும் மேலாடையும்தான். சமைக்கும் போது நாம் அணிந்துள்ள துணிகளை அவை பாதுகாக்கின்றன. நம் கைகளை சூடான பாத்திரங்களில் இருந்து பாதுகாப்பவை கைப்பிடி துணிகள். இவை இரண்டுமே எளிதில் அழுக்கு படிந்துவிடும். சமையல் பொருட்கள் கொட்டி பிசுக்கு ஏறி வாசனை அடிக்கும். எனவே இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாகவது இவற்றை சுத்தமாக துவைத்து போடவேண்டியது அவசியம். எளிய முறையில் சுத்தம் செய்ய சின்ன சின்ன டிப்ஸ்.

எளிய முறையில் ஏர்பான் சுத்தம்

முதலில் நம்முடைய ஏர்பான் எந்தமாதிரியான துணியில் உருவாக்கப்பட்டது என்பதை படித்து பார்த்து அதற்கேற்ப துவைக்கவேண்டும். வெது வெதுப்பான நீரில் சோப் பவுடர் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் லேசாக கசக்கினாலே போதும் பிசு பிசுப்பு ஒடிவிடும்.

காய்ந்து போய் நாள்பட்ட அழுக்காக உள்ளதை அம்மோனியா போட்டு துவைக்கலாம். அரைவாளி தண்ணீரில் மூன்று டீஸ்பூன் அமோனியா விட்டு இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும் பின்னர் பிரஸ் வைத்து தேய்த்தால் அழுக்கு எளிதில் போகும்.

சமையல் வாசனை போக

ஏப்ரானில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, உள்ளிட்ட வாசனைகள் வருவது இயல்பு. எனவே இந்த வாசனை நீங்க ஹைட்ரஜன் பெராக்ஸைடை 10 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் துவைக்கவேண்டும்.

பால் வாசனை போக

ஏப்ரானில் அடிக்கடி பால் கொட்டி ஒரு மாதிரியான வாசனை ஏற்படும். இதனை வாசனைப் போக வெள்ளை வினிகர் விட்டு ஊறவைத்து அலசினால் வாசனை போகும். ஏப்ரான் பளிச் என்று ஆகும்.

கைப்பிடி துணிகள்

சமையலறையில் அதிகம் உபயோகப்படுத்தும் ஒரு பொருள் கைப்பிடித்துணிகள். என்னதால் ஸ்டீல் கைப்பிடிகள் இருந்தாலும் துணியில் லாவகமாக பிடித்து உபயோகிப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். சமைலறை மேடை சுத்தம் செய்வதற்கும் துணிகள்தான் வசதியானது. எனவே அவற்றை தினமும் துவைத்து காயப்போடவேண்டியது அவசியம். சோப் பவுடர் போட்டு ஊறவைத்து அலசிய பின்னர் எலுமிச்சையுடன், உப்பு சேர்த்த தண்ணீரில் அலசி காயவைத்தால் தேவையற்ற பிசுக்குகளும், வாசனைகளும் போகும் துணியும் சுகந்த வாசனையோடு சுத்தமாகும்.

Story first published: Thursday, February 9, 2012, 17:41 [IST]
Desktop Bottom Promotion