மனதை கவரும் மலர் பராமரிப்பு

By Mayura Akilan

Flower Care
வீட்டிற்குள் நுழையும் போதே சுகந்தமான நறுமணத்தை தருபவை மலர்கள். மனதிற்கும் இதம் தரும் அந்த மலர்கள் பூ ஜாடியில் வைத்தால் இரண்டு நாட்களுக்கு கூட தாங்குவதில்லை. வாடிப்போய் அழகியலை இழந்து விடுங்கின்றன. பூக்களை வாடாமல் பராமரிக்க மலர் அலங்கார நிபுணர்கள் கூறும் அசத்தலான ஐடியாக்களை கேளுங்களேன்.

மலராத மொட்டுக்கள்

பூக்களை அலங்கரிக்க வாங்கும் போது முழுமையாக மலராத மொட்டுக்களை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான் அவை வீட்டினுள் வைக்கும்போது மலரும். அத்துடன் நீண்ட நாட்களுக்கு வாடிப்போகாமல் இருக்கும். கூடவே சுகந்தமான நறுமணமும் கிடைக்கும்.

தண்ணீர் அவசியம்

பூ ஜாடியில் அலங்கரிக்கும் முன்பு அழுகிய, சேதமடைந்த இலைகளையும், பூக்களின் இதழ்களையும் அகற்றிவிட வேண்டும். பூக்களின் காம்புகள் முழுமையாக மூ‌‌ழ்கும் வகையில் தண்ணீரை ஊற்றி, 24 மணி நேரம் வைக்க வேண்டும். இதன் பிறகு பூக்களை சாடியில் வைக்கலாம்.

ஐந்து இலைகளை விட்டு, காம்பை வெட்டவும். பூக்களுக்கு சேர வேண்டிய தண்ணீர் மற்றும் சத்து காற்றடைப்பால் சேராமல் போவதை தடுக்க காம்பைத் தண்ணீருக்கு அடியில் வைத்து வெட்ட வேண்டும். காம்பை சாய்வாக வெட்டுவதால் பூக்களுக்கு அதிக அளவில் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

பூ ஜாடியில் பாக்டீரியாக்கள் வளர்ந்து பூக்களின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியை பாதிக்காமல் இருக்க சாடியில் செம்பில் தயாரிக்கப்பட்ட சிறிய பொருளை போட்டு வைக்கலாம்.

குளிர்ச்சியான இடம்

பூக்கள் அதிக நாள் வாடாமல் இருக்க அவற்றை குளிர்ந்த காற்று படும் வகையில் ஜன்னலுக்கு அருகில் வைப்பது நல்லது. எந்த சூழ்நிலையிலும் வெயில் படக்கூடாது. பழங்கள், காய்கறிகள் ஆகியவை "எ‌த்திலீன்" என்ற வாயு வெளியிடுகின்றன. இதனால் அவற்றிர்கு அருகில் பூக்களை வைத்தால் அவை விரைவில் வாட வாய்ப்புள்ளது. எனவே எந்த பாதிப்பும் இல்லாமல் குளிர்ச்சியாக வைக்கவும். அது மட்டுமல்லாது தினமும் பூ ஜாடியில் உள்ள தண்ணீரை மாற்ற வேண்டும். இது போல கவனம் செலுத்தி பராமரித்தால் பூக்கள் நீண்ட நாட்களுக்கு வாடாமல் மலர்ந்து சிரிக்கும்.

Story first published: Thursday, March 8, 2012, 16:10 [IST]
Desktop Bottom Promotion