உங்க தோட்டத்து செடி வாடிப்போகுதா? கவனம் தேவை!

By Mayura Akilan

Water Well for your garden
வீட்டுத்தோட்டங்களில் அழகாய் செடிகளை வைப்பதில் ஆர்வம் காட்டும் பலரும் அதை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாளடைவில் அவை வாடிப்போய் இறந்து விடும். ஒரு சிலர் செடிகளை தனிகவனத்துடன் பராமரித்தாலும் சில செடிகள் வாடிப்போய்விடும். முதலில் செடிகள் வாடிப்போவதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பராமரித்தால் ஆரோக்கியமான தாவரங்களை தோட்டங்களில் வளர்க்கலாம்.

தண்ணீர் விடுங்கள்

தாவரங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அவை வாடிப்போய்விடும். எனவே அனைத்து செடிகளுக்கும் உரிய இடைவெளியில் தண்ணீர் விடவேண்டும். அதிக அளவு தண்ணீர் ஊற்றினாலும் ஆபத்து. எனவே செடிகளின் வேர்ப்பகுதியில் படுமாறு தண்ணீர் விடுவதோடு தெளிப்பான் மூலம் இலைகளில் படுமாறு தண்ணீர் விடுவது செடிகளுக்கு உயிரோட்டத்தை தரும்.

நிழல் ஏற்படுத்தலாம்

ஒரு சில நேரங்களில் அதிக வெப்பத்தினால் செடிகள் வாடிப்போகலாம். அதுமாதிரியான நேரத்தில் தொட்டியை இடம் மாற்றி வைக்கலாம். தரையில் வளரும் செடிகள் எனில் அவற்றிர்கு நிழலை ஏற்படுத்தி தரலாம்.

பூச்சி தாக்குதல்

செடியின் ஏதேனும் ஒரு இலையில் பூச்சித் தாக்குதல் இருந்தால் அந்த இலையை அகற்ற வேண்டும். அனைத்து இலைகளுமே பூச்சிதாக்குதலுக்கு ஆளாகியிருந்தால் அவற்றை அகற்றிவிடுவது செடிகளுக்கு பாதுகாப்பானது. பின்னர் முளைக்கும் இலைகள் புதிதாக ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஏதேனும் ஒரு செடியில் பூச்சி தாக்கினால் அதை கண்டறிந்து உரிய உரம் இடம் இடவேண்டும். இல்லையெனில் அந்த செடியில் உள்ள நோய் பாதிப்பு பிற செடிகளுக்கு பரவி பாதிப்பு ஏற்படும். ஒரு சில செடிகளில் தண்டில் புழு தாக்குதல் இருக்கும். அப்போது தண்டுப்பகுதியை லேசாக வெட்டிவிட வேரினை ஆதாரமாகக் கொண்டு செடிகள் வளரும்.

நம் வீட்டுத்தோட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் செடிகளை வாடிப்போகாமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் தோட்டக்கலைத்துறை நிபுணர்கள்.

Story first published: Monday, July 16, 2012, 10:02 [IST]
Desktop Bottom Promotion