தோட்டத்துல பாத்தி கட்டி, கீரைச் செடி போட்டுருங்க...!

By Mayura Akilan

Gardening
கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், உயிர்ச்சத்து ‘ஏ’ (கரோட்டின்), உயிர்ச்சத்து ‘சி’ மற்றும் உயிர்ச்சத்து ‘பி’ காம்ப்ளக்ஸ் அதிலும் குறிப்பாக ஃபோலிக் ஆசிட், ரைபோஃப்ளேவின் நிறைந்து காணப்படுகிறது. உயிர்ச்சத்தும் தாது உப்புக்களும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், பல தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. பச்சைக்கீரையை பருப்பு மற்றும் தானிய வகைகளுடன் சேர்த்து உண்ணும்போது தரமான புரதச்சத்து கிடைக்கிறது. எலும்பு, பல் மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு பலம் அளிக்கிறது.

கீரைகள் வளர்ப்பதற்கு மிகவும் எளிதானது. குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்பனை செய்யலாம் என்பதால் புறநகர் பகுதிகளில் கிடைக்கும் நகர கழிவு நீரைக் கொண்டு கீரைகளை வளர்க்கின்றனர். இதனால் கீரைகளின் மூலம் நன்மை ஏற்படுவதற்கு பதிலாக சமயங்களில் வயிற்றுபோக்கு, ஒவ்வாமை போன்றவை ஏற்பட்டு விடுகின்றன. இதனால் நாமே கிடைக்கின்ற பொருட்களை கொண்டு வீட்டுத் தோட்டங்களில் எளிதாக நம்பகத் தன்மையுடன் வளர்க்க முடியும்

கீரைகளுக்கு பட்டம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாற்று பாவி சரியான இடைவெளியில் நடவுசெய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

கீரை வளர்க்க தேவையான இடத்தை தேர்வு செய்வது அவசியம். மண்ணை நன்றாகக் கிளறி சாம்பல் மற்றும் தொழு உரம் ஆகியவற்றை பரப்ப வேண்டும். அதில் விதைகளைத் தூவி விதைத்து பூவாளியால் நீர் தெளித்து வரவேண்டும். விதைத்த 25ம் நாளுக்கு மேல் நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம்.

கீரை பாத்தி

நிலத்தை நன்றாக கிளறி, சாம்பல், தொழு உரம், பொடித்த கடலைப் பிண்ணாக்கு, பொடித்த வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைப் பரப்பி கிளறிவிட வேண்டும். பிறகு 12 அடி நீளம், இரண்டரை அடி அகலத்திற்கு பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் முக்கால் அடி இடைவெளி வாய்க்கால் இருக்க வேண்டும்.

வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 7 அங்குலம் இடைவெளி விட்டு நாற்றுக்களை பாத்தியில் நடவு செய்ய வேண்டும். கீரை வளர தண்ணீர் அவசியம் என்பதால் செழும்பாக தண்ணீர் கட்டவேண்டும்.

மீன் கரைசல்

நடவு செய்த 7ம் நாள் 250 மில்லி மீன்அமிலக்கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மீன் கழுவிய தண்ணீரை ஒருநாள் அப்படியே வைத்திருந்து மறுநாள் சரிபங்கு தண்ணீரில் கலந்து செடிகள் மீது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இதனால் கீரை செழிப்பாக வளரும்.

நடவு செய்த 15ம் நாள் மூலிகை பூச்சிவிரட்டி தெளித்தால் பூச்சிகள் அண்டாது. இதுபோல கீரைகளை பாதுகாத்தால் நல்ல மகசூல் கிடைக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கீரையை பரிசளிக்கலாம்.

நகர்புறங்களில் இடம் இல்லாதவர்கள் மாடி தோட்டத்தில் கீரை வளர்க்கலாம். 10 அடி நீள பையில் காய்ந்த இலைகள் தென்னை நார் கழிவு + மண்புழு உரம் + வேம்பு புண்ணாக்கு ஆகியவற்றை நிரப்பி நல்ல நிலமாக மாற்றலாம். அதில் வீட்டிற்கு தேவையான கீரையை பயிர் செய்யலாம்.

Story first published: Tuesday, April 17, 2012, 17:42 [IST]
Desktop Bottom Promotion