காலையில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க சிறுநீரகம் மோசமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..

World Kidney Day 2025: தற்போது சிறுநீரக பிரச்சனைகளை நிறைய பேர் சந்தித்து வருகின்றனர். நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இந்த சிறுநீரகங்கள் தான் நமது உடலில் சுத்திகரிக்கும் பணியை செய்கின்றன. இது தவிர இந்த சிறுநீரகங்கள் pH, உப்பு, பொட்டாசியம் மற்றும் பலவற்றை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

இந்த சிறுநீரகங்களில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அதன் தாக்கம் ஒட்டுமொத்த உடலிலும் காணப்படும். ஒருவரது சிறுநீரகங்கள் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபணுக்கள் ஆகியவற்றினால் பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

World Kidney Day 2025 Unusual Signs of Kidney Damage That Appear In The Morning Time

சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், சிறுநீரகங்களால் இரத்தத்தை சரியாக வடிகட்ட முடியாது. அதுவும் ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை இருந்தால், சிறுநீரக நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

சிறுநீரகங்களில் பிரச்சனை அல்லது நோய் இருந்தால், ஆரம்பத்தில் ஒருசில அறிகுறிகள் தெரியும். அதுவும் காலை வேளையில் ஒருசில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை கவனித்து உடனே சிகிச்சை மேற்கொண்டால், ஆரம்பத்திலேயே சிறுநீரக பிரச்சனையை சரிசெய்யலாம்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக சிறுநீரக தினம் மார்ச் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். இன்று உலக சிறுநீரக தினம் என்பதால் சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் காலையில் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

1. முக வீக்கம்

காலையில் எழுந்ததும் முகத்தில் லேசான வீக்கம் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் முக வீக்கம் சிறுநீரக நோயின் அறிகுறியாகும். அதுவும் இந்த வீக்கம் கணுக்கால், பாதங்கள் போன்றவற்றில் காணப்பட்டால், சிறுநீரகங்களில் தீவிர பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எப்போது சிறுநீரகங்களால் இரத்தத்தில் இருந்து நச்சுக்களை வடிகட்ட முடியாமல் போகிறதோ, அப்போது திரவம் தேங்கி வீக்கத்தை உண்டாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

2. நுரையுடன் கூடிய சிறுநீர்

காலையில் எழுந்ததும் சிறுநீர் கழிக்கும் போது, அந்த சிறுநீர் நுரையுடன் வெளியேறினால், அது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். எப்போது சிறுநீரகங்களால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய், சிறுநீரில் புரோட்டீன் அதிகமாகிறதோ, அப்போது தான் இப்படி நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறும்.

3. வறண்ட சருமம் மற்றும் அரிப்பு

சிறுநீரகங்கள் சேதமடைந்திருந்தால், உடலில் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் குவிந்து, வியர்வை சுரப்பிகளை சுருக்கி விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி வியர்வை சுரப்பிகள் சுருங்கும் போது, அது சருமத்தில் வறட்சியை அதிகரித்து, அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே சருமத்தில் திடீரென்று மிகுந்த வறட்சியையும், அரிப்பையும் சந்தித்து, அதற்கு என்ன தான் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினாலும், வறட்சி நீங்காமல் இருந்தால், சிறுநீரக பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.

4. மிகுந்த உடல் சோர்வு

சிறுநீரகங்கள் வழக்கம் போல செயல்படாமல், அதன் செயல்பாடு குறைந்தால், இரத்தத்தில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இப்படி நச்சுக்கள் இரத்தத்தில் அதிகம் தேங்கினால், அது உடல் சோர்வை அதிகரித்து, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட வைக்கும். ஆகவே இப்படியான அறிகுறியை சந்தித்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

5. வாய் துர்நாற்றம்

வழக்கத்திற்கு மாறாக வாய் துர்நாற்றம் அதிகமாக இருந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் வாய் துர்நாற்றத்தில் அம்மோனியா நாற்றத்தை உணர்ந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் சிறுநீரகங்களில் உள்ள பிரச்சனையைக் குறிக்கலாம். ஏனெனில் சிறுநீரகங்களால் சரியாக செயல்பட முடியாத போது, இரத்தத்தில் நச்சுக்கள் தேங்கி, அதன் விளைவாக இந்த அறிகுறிகளை காலையில் சந்திக்க நேரிடும். எனவே இந்த அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை சந்தித்து, பரிசோதனை செய்து பாருங்கள்.

சிறுநீரக நோய் வராமல் இருக்க எந்த மாதிரியான பழக்கங்களை கொள்ள வேண்டும்?

சிறுநீரகங்களில் எவ்வித பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமானால், பின்வரும் பழக்கங்களை ஒருவர் கொண்டிருக்க வேண்டும். அவையாவன:

* பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.
* தினமும் 1 மணிநேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
* உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க வேண்டும்.
* தினமும் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
* புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
* நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion