பாக்கெட் பாலை கட்டாயம் கொதிக்க வைக்க வேண்டுமா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..

Boiling Packet Milk: தினமும் உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளும் மிகவும் முக்கியமான உணவு தான் பால். பாலில் கால்சியம் அதிகளவில் உள்ளன. இந்த கால்சியம் எலும்புகளின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. இப்படியான பாலை வாங்கினால், அவற்றை நன்கு கொதிக்க வைத்த பின்னர் தான் அருந்துவோம்.

ஏனெனில் பச்சை பாலில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அதிகம் இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அதற்காகவே அதை நன்கு கொதிக்க வைத்த பின் குடிக்கிறோம். இப்படியான பழக்கம் பழங்காலம் முதலாகவே மக்களால் பின்பற்றப்படுகிறது. இப்படியான செயல் வேண்டுமானால் மாட்டுப்பாலுக்கு பொருத்தமாக இருக்கும்.

Is It Necessary To Boil Packet Milk - Expert Opinion

ஆனால் தற்போது நகர்புறங்களில் பாக்கெட் பால் மட்டும் தான் அதிகம் கிடைக்கிறது. இப்படியான பாக்கெட் பாலை வாங்கினாலும், பலர் அந்த பாலை நன்கு கொதிக்க வைத்து தான் குடிக்கிறார்கள். உண்மையிலேயே பாக்கெட் பாலையும் நன்கு கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டுமா என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். இந்த கேள்விக்கான பதிலை உணவு ஆலோசகரான டாக்டர் அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விளக்கமாக கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "பொதுவாக பாக்கெட் பாலானது கெட்டுப் போகாமல் இருக்க பேஸ்டுரைசேஷன் செயல்முறையை மேற்கொள்வார்கள். பேஸ்டுரைசேஷன் என்பது என்னவென்றால், அதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று உயர் வெப்பநிலையில் குறைவான நேரம் பாலை சூடுபடுத்துவது, அதாவது 72 டிகிரி செல்சியஸில் 15-20 நொடிகள் சூடுபடுத்தி இறக்கி குளிர வைப்பது. இரண்டாவது மிகவும் உயர் வெப்பநிலையில் குறைந்த நேரம் சூடுபடுத்துவது, அதாவது 132 டிகிரி செல்சியஸில் 2 நொடிகள் பாலை கொதிக்க வைப்பது. இச்செயலால் பால் கெட்டுப் போகாமல் இருக்கும். மேலும் இப்படி செய்வதன் மூலம், அந்த பாலில் உள்ள தீங்கு விளைவிக்கும் சால்மோனெல்லா, ஈகோலை போன்ற கிருமிகள் அழிக்கப்பட்டு, பாக்கெட் செய்து விற்பதற்கு ஏற்றவாறு மாற்றப்படுகிறது." என்று கூறினார்.

"எனவே நீங்கள் வாங்கும் பாக்கெட் பால் எந்த சேதமும் அடையாமல், முறையாக குளிர்ந்த நிலையில் வைத்து விற்கப்பட்டு வந்தால், அந்த பாலை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏனெனில் அதில் பெரிதாக கிருமிகள் எதுவும் இருக்காது. ஒருவேளை நீங்கள் வாங்கும் பால் பாக்கெட் சரியாக இல்லாததாக உணர்ந்தால், அந்த பாலை கொதிக்க வைப்பதில் தவறு ஏதும் இல்லை." என்று டாக்டர் கூறினார்.

Take a Poll

"மேலும் பாக்கெட் பாலை தேவையில்லாமல் அடிக்கடி கொதிக்க வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் குறையும் வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்த பாலை அதிகம் கொதிக்க வைக்கும் போது, அதன் சுவை மேம்படும். ஏனெனில் அந்த பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் சர்க்கரை, கேரமலைஸ் ஆகும். இப்படி கேரமலைஸ் ஆகும் போது பாலின் சுவை அதிகரிக்கும்." என்று டாக்டர் கூறினார்.

"எனவே இதுவரை பாக்கெட் பாலை கிருமிகளை அழிப்பதற்காக கொதிக்க வைத்து வந்தால், அது தவறு. தேவையில்லை. ஒருவேளை காபி, டீ போட கொதிக்க வைக்க வேண்டியிருந்தால், தாராளமாக கொதிக்க வைத்து குடிக்கலாம், அதில் எந்த தவறும் இல்லை" என்று டாக்டர் அருண்குமார் கூறினார்.

ஆகவே நண்பர்களே! உங்கள் வீட்டிலும் பாக்கெட் பால் வாங்கினால், இதுவரை அதை மணிக்கணக்கில் கொதிக்க வைத்து வந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். லேசாக சூடேற்றி குடித்தாலே போதுமானது. ஒருவேளை மில்க்ஷேக் ஏதாவது செய்வதாக இருந்தால், அந்த பாக்கெட் பாலை அப்படியே சூடேற்றாமல் பயன்படுதுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, August 13, 2025, 12:53 [IST]
Desktop Bottom Promotion