உடலுக்கு சக்தி தரும் பம்பளிமாஸ் பழம்

By Mayura Akilan

Pummelos
கோடை காலத்தில் பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது உடல் சூட்டினைத் தணிக்கும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள வைட்டமின் சத்தும், கால்சியம் சத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிப்பதோடு, கோடைகால சோர்வினை போக்குகிறது.

பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும். சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும். இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது.

உடல் சூடு தணியும்

கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுவது குறையும்.

வைட்டமின் எ, கால்சியம்

இந்த பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும். பம்பளிமாஸ் பழத்தில் சுண்ணாம்புச் சத்தும் உள்ளதால் பித்த சூட்டை அகற்றும்.

சக்தி தரும் பம்பளிமாஸ்

நோய் பாதிப்பினால் உடல் இளைத்துப்போனவர்கள் மதிய நேரத்தில் பம்மளிமாஸ் பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் பலமடையும், சோர்வு நீங்கும். மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

இரத்தத சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, March 27, 2012, 15:46 [IST]
Desktop Bottom Promotion