நோய்க் கிருமிகளைக் கொள்ளும் அரித்தை

By Mayura Akilan

'உடல் நலம் காக்க இறைவனால் அருளப்பட்டது' என்னும் பெருமைக்குரிய தாவரம் அரித்தை. இது பல பருவம் வாழும் குறுஞ்செடி. இதன் தண்டு தரையடியில் உள்ளது. இதனை ரைசோம் என்பர். தரையடித்தண்டு மருத்துவ குணம் கொண்டது. நறுமணத் தாவரமான இது தெற்குசீனா மற்றும் தென் கிழக்கு ஆசிய புல்வெளிகளைச் சார்ந்தது. ஆசியா முழுவதும் இதனுடைய நறுமண கிழங்குகளுக்காக அதிகமாக பயிரிடப்படுகிறது. 4 அல்லது 6 ஆண்டுகளான தாவரத்தில் இருந்து தரையடித்தண்டு சேகரிக்கப்படுகிறது. தரையடித்தண்டினை துண்டித்து அடுத்த காலத்தில் நடப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் இருந்து செஸ்குய்டெர் பின் லேக்டோன்களான கலான்கோல், கலான்ஜின், டைடெர்பின்கள், ஃபிளேவனாய்டு, எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான அல்பா பைனின், சினி யோல் மற்றும் லினலூல், ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவையே தரையடித்தண்டின் மருத்துவப்பயன்களுக்கு காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைவனால் அருளப்பட்டது

அரேபிய மருத்துவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாவரத்தினை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினர். மேலை நாடுகளில் ஜீரணக்கோளாறுகள், வயிற்று உப்புசம், மற்றும் கடற்பயண நோயினைப் போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மானிய மறை ஞானி ஹில்டு கார்டு என்பவர் இத்தாவரத்தினை Spice of life என்றார். அதாவது உடல்நலம் காக்க இறைவனால் அருளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து சமையலில் இது முக்கியமான நறுமணப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆசியாவின் பகுதிகளில் இதனை அரேபியக்குதிரைகளுக்குக் கொடுத்து அவற்றினை செயல் ஊக்கப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலை சூடாக்கும்

தரையடித்தண்டில் உள்ள வேதிப்பொருட்கள் உடலை சூடாக்கி கிளர்ச்சியுறச் செய்வதுடன் ஜீரண வலுவேற்றியாக செயல்படுகிறது. உடலியல் செயல்களைத் தூண்டுவதுடன் அஜீரணம் போக்கும். வாந்தி எடுத்தலை தடுக்கும். மற்றும் காளான்களுக்கு எதிராகச் செயல்பட்டு அவை உண்டாக்கும் நோயினைத் தீர்க்கும். பாக்டீரியங்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. தரையடித்தண்டின் பொடி, கசாயம் மற்றும் சாராயக்கரைசல் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

நோய்க்கிருமிகளை கொல்லும்

இந்திய மருத்துவத்தில் இதனை வயிற்றுவலி, வீக்கங்கள் நீக்கவும், சளி போக்கி நரம்புகளுக்கு வலுவேற்றவும் பயன்படுத்தப்படுகிறது. விக்கல், அஜீரணம், வயிற்றுவலி,முடக்குவாத மூட்டுவலி, மற்றும் விட்டு விட்டு வரும் காய்ச்சல் போக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சீன மருத்துவத்திலும் தரையடித்தண்டு இதே நோய்களை தீர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காளான் எதிர்ப்புச் சக்திகளை உறுதி செய்துள்ளன. தரையடித்தண்டின் கசாயம் பல நோய்க் கிருமிகளுக்கு குறிப்பாக ஆந்த்ராக்ஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது. குடலில் கேண்டிடா எனும் காளான் தோற்றுவிக்கும் நோயினைப் போக்குகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, September 18, 2011, 14:45 [IST]
Desktop Bottom Promotion