உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த வெண் தாமரை கஷாயம்

By Mayura Akilan

Lotus
தாமரை மலர்களை இறைவனுக்குரிய ஆசனமாக புராணங்கள் சித்தரிக்கின்றன. கல்வியின் நாயகி சரஸ்வதி வெண்தாமரை மலரிலும், செல்வத்தின் நாயகி செந்தாமரை மலரிலும் வீற்றிருப்பதாக கூறப்படுகிறது. தாமரை மலர்கள் தன்னிகரற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன.

செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும் வெண்தாமரையே அதிக அளவில் மருத்துவத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது.

மூளை வளர்ச்சி

உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க வெண்தாமரைப் பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட ஜன்னி நோய் குணமாகும்.

கண்பார்வை தெளிவு

வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.

உயர் ரத்த அழுத்தம்

வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

கூந்தல் தைலம்

தாமரைப்பூ ,அதிமதுரம்,நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

இருதயநோய் போக்கும்

செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21 குடித்து வர இருதய நோய் குணமடையும்.

இருமல் போக்கும் நீர்

தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வர வறட்டு இருமல் குணமடையும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, December 14, 2011, 14:27 [IST]
Desktop Bottom Promotion