மழை பெய்யும் போது சளி பிடிக்காமல் இருக்கணுமா? அப்ப இதுல ஒரு டீயை குடிங்க போதும்..!

Rainy Day In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இப்படி திடீரென்று காலநிலையில் மாற்றம் ஏற்படும் போது, குறிப்பாக காலநிலை குளிர்ச்சியாகும் போது நிறைய பேர் சளி, இருமல், தும்மல், மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.

அதுவும் மழை பெய்யும் போது உடலை இதமாக வைத்துக் கொள்ள பலருக்கு அடிக்கடி டீ குடிக்க வேண்டுமென்று தோன்றும். நீங்கள் இப்படி டீ பிரியர் என்றால், மழை பெய்யும் காலத்தில், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், பின்வரும் ஒருசில டீக்களை தயாரித்துக் குடித்து வாருங்கள். இந்த டீக்கள் ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையானதும் கூட.

Healthy Teas You Must Drink During Rainy Day In Tamil

இஞ்சி டீ

டீயில் இஞ்சி டீ யை பெரும்பாலானோர் விரும்பி குடிப்பார்கள். குறிப்பாக மழைக்காலத்தில் நிறைய பேர் இஞ்சி டீயை குடிப்பது மிகவும் நல்லது. இந்த டீ செரிமானத்திற்கு உதவுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அதற்கு ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

சீமைச்சாமந்தி டீ

உங்கள் மனம் அமைதியிழந்து ஒருவித அழுத்தத்துடன் இருந்தால், சீமைச்சாமந்தி டீயைக் குடிக்கலாம். இந்த மூலிகை டீ மன பதட்டத்தைக் குறைப்பதோடு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது. முக்கியமாக இந்த டீயை மழை பெய்யும் போது குடித்தால், இன்னும் அற்புதமாக இருக்கும்.

புதினா டீ

புதினா நல்ல புத்துணர்ச்சியைத் தரும் மணத்தைக் கொண்டது. மழை பெய்யும் போது மந்தமான மனநிலையை உணரக்கூடும். ஆனால் மழைக்காலத்தில் இந்த மந்தத்தன்மையைப் போக்கி, புத்துணர்ச்சி அளிக்க நினைத்தால், புதினா டீயைக் குடிக்கலாம். இந்த டீ செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலை குளிர்ச்சியாகவும், இதமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

துளசி டீ

மிகவும் புனிதமான செடியாக கருதப்படும் துளசியின் இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடித்தால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக இந்த டீ நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும், மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது மழை பெய்யும் போது கட்டாயம் குடிக்க வேண்டிய டீயும் கூட.

க்ரீன் டீ

க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க மட்டுமே உதவும் என்று நினைத்தால், அது தவறு. ஏனெனில் இந்த டீ நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. அதுவும் இந்த க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, மழை பெய்யும் போது குடித்தால், இன்னும் அட்டகாசமாக இருப்பதோடு, இரட்டிப்பு பலன்களைப் பெறலாம்.

செம்பருத்தி டீ

செம்பருத்தியைக் கொண்டு டீ தயாரித்து மழை பெய்யும் போது குடித்து வருவது மிகவும் நல்லது. இந்த டீயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி.ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன. இந்த செம்பருத்தி டீயை சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ குடிக்கலாம். எந்த நிலையில் குடித்தாலும், இதன் சுவை அற்புதமாக இருக்கும்.

பட்டை டீ

என்ன தான் பட்டை டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்ததாக இருந்தாலும், இந்த டீ மழைக்காலத்தில் குடிக்க ஏற்ற டீயும் கூட. இந்த வகை டீ இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதோடு, மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைக் றைக்கிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, June 19, 2023, 16:09 [IST]
Desktop Bottom Promotion