கண்ணிற்கு ஒளிதரும் பொன்னாங்கண்ணி

By Sutha

காய்கறிகளில் உள்ள சத்துக்களை விட கீரைகளில் 20 சதவிகிதம் கூடுதலாக சத்துக்கள் காணப்படுகின்றன. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கீரைக்கு உண்டு என்பதால் நாம் உண்ணும் உணவில் வாரத்திற்கு இரண்டு முறை கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற கீரைகளை விட பொன்னாங்கண்ணி கீரைக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்தக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் உடல் பொன்போல ஜொலிக்கும் என்பார்கள். அதனால்தான் இது பொன்னாங்கண்ணி என்று அழைக்கப்படுகிறது. 'பொன்னை எறிந்தாலும் பொடிக்கீரையை எறியாதே" என்ற பழமொழியும் இதனால் உருவானதுதான். பொன்னாங்கண்ணியை பொன்+ஆம்+காண்+நீ என பிரித்து விளக்கம் அளித்துள்ளனர் முன்னோர்கள்.

சத்துக்கள்

பொன்னாங்கண்ணியில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு. இந்த கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன. பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சியை தர வல்லது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் பல ஸ்டிரால்கள், அமிலங்கள் உள்ளன. சிட்ரோஸ்டிரால், சிட்கமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஒலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவை பொன்னாங்கண்ணியில் காணப்படுகின்றன.

கண்ணிற்கு ஒளி தரும்:

இக்கீரையின் காம்புப்பகுதிகளையும் சேர்த்து சமைத்தால்தான் முழுமையான சத்து கிடைக்கும். இதிலுள்ள சத்துக்கள் கண்களுக்கு ஒளியையும் நல்ல தெளிவான பார்வையையும் அளிக்கும். அத்துடன் கண் தொடர்புடைய அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

இந்த கீரையை சமைத்து சாப்பிடுவதுடன் வேறுவகையிலும் பயன்படுத்தலாம். பொன்னாங்கன்னிக்கீரையை பசு வெண்ணெயில் வதக்கி இரு கண்களில் வைத்து துணியால் கட்ட கண் நோய்கள் போய்விடும். பார்வை தெளிவு பெறும்.

பொன்னாங்கன்னியில் இருந்து தைலம் எடுத்து தடவி வந்தால் கண் எரிச்சல், கண்வலி குணமடையும். கண் குளிர்ச்சியடையும். இக்கீரையை பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

உடல் உஷ்ணம் தணியும்:

பொன்னாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளவதன் மூலம் இதயம் வலுப்பெறும், ரத்த ஓட்டம் சீரடையும், மூளை, நரம்புகள் பலம் பெற்று சீரான நிலையில் இயக்கம் பெறும். வயிறு, குடல் கல்லீரல், மண்ணீரல், போன்ற உறுப்புகளின் பலத்திற்கு இக்கீரை பெரிதும் துணை புரிகிறது.

இது உடலில் மிகுதிப்படும் உஷ்ணத்தை தணித்து உடலை சமநிலையில் வைத்திருக்கும். உடலுக்கு வலுவையும் நல்ல வளர்ச்சியையும் அளிக்க வல்லது. உஷ்ணமிகுதியால் மூலநோய் ஏற்பட்டு வருந்துபவர்கள் இக்கீரையை சாப்பிட்டு வர நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். ரத்தம் கொட்டும் மூலமாக இருந்தாலும் குணமாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, May 5, 2011, 12:51 [IST]
Desktop Bottom Promotion