Exclusive: குளிர்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தடுக்க டாக்டர் கூறும் சில டிப்ஸ்... மிஸ் பண்ணாம படிங்க...

Common Winter Health Problems: குளிர்காலம் தொடங்கிவிட்டது. குளிர்காலம் தொடங்கிவிட்டாலே மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதும். ஏனெனில் இந்த பருவகாலத்தின் போது காணப்படும் குளிர்ச்சியும், அதிகரித்திருக்கும் காற்றின் ஈரப்பதமும் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

குளிர்காலத்துடன் சேர்ந்து வருகின்ற அனைத்து உடல்நல ஆபத்துகளையும் தணிப்பதற்கு தூய்மை பராமரிப்பு, தேவையான அளவு நீர் + திரவம் அருந்துதல் மற்றும் உடலை மூடுகின்ற முறையான ஆடை அணிதல் போன்ற எளிய நடைமுறைகள் உதவக்கூடும். இது குளிர்காலத்தை இதமான அனுபவமாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றிவிடும்.

Exclusive Doctor Shared Common Winter Health Problems And Tips To Prevent Them

இப்படிப்பட்ட குளிர்காலத்தில் வரக்கூடிய பொதுவான உடல்நல பிரச்சனைகள் மற்றும் அவை வராமல் எப்படி தடுப்பது என்பது பற்றியும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டரின் தொற்றுநோய்கள் பிரிவின் முதுநிலை சிறப்பு மருத்துவர், டாக்டர். R. மதுமிதா அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். அதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

வைரஸ் தொற்றுகள்

குளிர்ந்த பருவநிலையானது, சளி மற்றும் இருமல் போன்ற வழக்கமான சுவாசப்பாதை தொற்றுகளால் பலர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. இக்காலத்தின் போது வைரஸ்கள் எனப்படும் நச்சுயிரிகள் மிக எளிதாக பரவக்கூடும்.

* நோய்க்கிருமிகளை அகற்றுவதற்கு சோப் மற்றும் நீரைப் பயன்படுத்தி பல தடவைகள் உங்கள் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம். இது வைரஸ் தொற்றுகள் நமக்கு வருகின்ற வாய்ப்புகளை குறைப்பதற்கு அவசியம்.

* மேலும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களை தவிர்ப்பது, அதுவும் குறிப்பாக ஃப்ளூ காய்ச்சல் பரவும் காலங்களின் போது, தொற்றுக் கிருமிகளை தமது உடலில் கொண்டிருக்கின்ற நோய்தாங்கி நபர்களிடமிருந்து நமக்கு தொற்று பரவுவதை இது குறைக்கும்.

* குறிப்பாக அதிகாலை வேளையிலும் மற்றும் பின்மாலை நேரங்களிலும் உடலை மறைக்கின்ற ஆடைகளை அணிந்து, உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வது குளிருடன் தொடர்புடைய நோய்கள் வராமல் தடுக்க உதவும்.

* கனமான ஆடைகளைப் பயன்படுத்துவது, அதிக அளவில் நீர் அருந்துவது, ஆரோக்கியமான உணவுகளை உண்பது போன்ற எளிய நடவடிக்கைகள், நோயெதிர்ப்பு சக்தியை மேலும் உயர்த்தி மாற்றம் கண்டிருக்கும் பருவநிலைக்கு ஏற்றவாறு நமது உடல் பழகிக்கொள்வதற்கு வழிவகுக்கும்.

* இன்ஃபுளூயன்சா எனப்படும் சளிக்காய்ச்சல், ஒரு பொதுவான ஆனால், தீவிரமான வைரஸ் தொற்றாகும். உங்களது மருத்துவரின் பரிந்துரைப்படி, இன்ஃபுளூயன்சா தடுப்பூசி மருந்தை போட்டுக்கொள்வதன் மூலம் திறம்பட தடுக்க முடியும்.

சுவாச பிரச்சனைகள்

குளிர்ச்சியான பருவநிலை மற்றும் காற்றில் கலந்திருக்கின்ற தூசி துகள்களின் காரணமாக, சுவாசப்பாதை ஒவ்வாமைகள் (அலர்ஜி) மற்றும் சைனஸ் பிரச்சனைகளால் குளிர் காலத்தின்போது மக்கள் கவலைப்படுகின்றனர் மற்றும் புலம்புகின்றனர்.

* ஒவ்வாமையை ஏற்படுத்தும் விஷயங்களுக்கு நாம் வெளிப்படுவதை குறைக்க வெளியே செல்லும்போது முககவசங்களைப் பயன்படுத்தலாம். ஒவ்வாமைகளை ஏற்படுத்துகிற எரிச்சலூட்டிகளை முககவசம் தடுத்து வடிகட்டிவிடும்.

சிக்குன்குனியா

வைரஸ் தொற்றை கொண்டிருக்கின்ற ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் மனிதர்களை கடிக்கும்போது சிக்குன்குனியா ஏற்படுகிறது. அப்பாதிப்புள்ள நபர்களுக்கு குளிர்நடுக்கத்துடன், தொடர்ந்து விடாத அதிக காய்ச்சலும், கடுமையான மூட்டுவலியும், தசைவலியும் மற்றும் பலவீன உணர்வும் இருக்கும்.

* தேங்கியிருக்கும் நீர் நிலைகளில் நோய்பரப்பும் கொசுக்கள் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்கின்ற மழைக்காலத்தின்போதும் சிக்குன்குனியா தொற்றுகள் அதிக நபர்களை பாதிக்கும். முறையான கழிவுநீர் வாய்க்கால்கள் இல்லாத இடங்களிலும் மற்றும் வேண்டாமென தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் வாளி போன்றவற்றிலும் அல்லது இயற்கையாகவே தண்ணீர் தேங்கக்கூடிய மரத்தின் துளிர்களிலும் நீர் தேங்கும் இடத்தில் கொசுக்கள் பல்கிப் பெருகக்கூடும்.

* சூடான பருவநிலைகளிலும் கூட, சிக்குன்குனியா தொற்று ஏற்படக்கூடும் என்றாலும், மழைப்பொழிவு அதிகம் இருக்கின்ற மாதங்களின்போது இதன் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. கொசுக்களின் எண்ணிக்கையும் மற்றும் அவைகளின் மூலம் தொற்றுப்பரவலின் சாத்தியமும் இந்த காலகட்டத்தில் அதிகமாகவே இருக்கும்.

* DEET - ஐ உள்ளடக்கிய கொசுவிரட்டி மருந்துகள் பிக்காரிடின் அல்லது சருமத்தின் மீது தடவக்கூடிய சிட்ரோனெல்லா போன்ற இயற்கையான திரவங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

* சாத்தியமானால், வீடுகள் / பணியமைவிடங்களில் ஜன்னல்களில் கொசுவலைகளைப் பயன்படுத்தலாம். வாளிகள், பூந்தொட்டிகள் மற்றும் பழைய டயர்கள் போன்ற தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களை மூடி வைப்பது மற்றும் அவைகள் உலர்வாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

* பூந்தொட்டிகளிலும், வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுப் பாத்திரங்களிலும் உள்ள நீரை அடிக்கடி மாற்றுவதையும் உறுதி செய்யுங்கள். இத்தகைய நடவடிக்கைகள் கொசுக்களால் பரவும் தொற்றுக்களின் ஆபத்து வராமல் தடுக்கவும் மற்றும் குறைக்கவும் உதவும்.

மூட்டு பிரச்சனைகள்

குளிர்ந்த பருவ நிலையானது, கீல்வாதம் (ஆர்த்ரிட்டீஸ்) அல்லது பிற மூட்டு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மூட்டு வலியையும், மூட்டுகளில் விறைப்புத்தன்மையையும் ஏற்படுத்திவிடும். மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகள் மற்றும் தசைநாண்கள் சுருங்குமாறு செய்வதால், குறைவான இயங்குத்திறனையும் மற்றும் அதிகரித்த வலியையும் குளிர் விளைவிக்கிறது. காற்று மண்டல அழுத்தத்தில் மாற்றங்களும் மற்றும் அதிக குளிரான சூழல்களும் மூட்டுகளில் வீக்கத்தையும் மற்றும் அதிகரித்த மூட்டு வலியையும் ஏற்படுத்தக்கூடும்.

* இந்த வலி அறிகுறிகளிலிருந்து விடுபட அல்லது அவை வராமல் தடுக்க மூட்டு நெகிழ்வுத்தன்மையைப் பேணுவதற்கான மிருதுவான உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடுங்கள். மூட்டு விறைப்புத்தன்மையிலிருந்து நிவாரணம் பெற சூடான நீரில் குளிக்கலாம் மற்றும் சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.

* குளிர் காலத்திற்கேற்ற பொருத்தமான ஆடைகளை அணிவதும் உங்களது உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவும் மற்றும் மூட்டுகளில் அசௌகரியம் ஏற்படாமலும் தடுக்கும்.

வறண்ட சருமம்

குளிர்ச்சியான பருவநிலையும், குறைந்திருக்கும் காற்றின் ஈரப்பதமும், சருமத்திலுள்ள நீர்ச்சத்தை குறைத்து விடுவதால், குளிர் காலத்தின் போது உலர்ந்த சருமம் மற்றும் அரிக்கும் தோலழற்சி ஆகியவை மிகப் பொதுவான பிரச்சனைகளாக இருக்கின்றன. சருமம் நீர்ச்சத்தை இழந்து, உலர்ந்துபோய் தோல் உதிர்வு மற்றும் எரிச்சலுடன் இருப்பதையே இது குறிக்கிறது. தோல்படை / அரிக்கும் தோலழற்சி உள்ள நோயாளிகளுக்கு சருமம் சிவத்தல் மற்றும் அரித்தலை விளைவிக்கும் இந்த பருவநிலை அவர்களுக்கு பாதிப்பை மோசமாக்கி விடக்கூடும்.

* உலர்ந்த சருமப் பிரச்சனையிலிருந்து விடுபட மாய்ஸ்சரைசர்கள் பெரிதும் உதவும். குளியலுக்குப் பிறகு அல்லது கைகளை கழுவியதற்குப் பிறகு இதனை தடவுவது சிறந்தது. எண்ணெய் அடிப்படையிலான மற்றும் செறிவான மாய்ஸ்சரைசர்கள் உங்களது சருமத்தின் மீது ஈரப்பதம் தொடர்ந்து தக்க வைக்கப்படுவதற்கு சிறப்பாக உதவும்.

* இது தவிர போதுமான அளவு தண்ணீரை குடித்து, உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதோடு, நீண்டநேரம் சூடான தண்ணீரில் குளிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சூடான தண்ணீர், சருமத்தின் மேல் உள்ள எண்ணெயை நீக்கிவிடும். அதற்குப் பதிலாக, வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். சருமத்திற்கு அதிகம் தேவைப்படுகின்ற ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு உங்களது குளியல் நேரத்தை குறைத்துக் கொள்ளவும்.

முடிவு

"நாட்டின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில், சென்னை மாநகரில் குளிர்காலம் என்பது, அதிக குளிர் வாட்டியெடுக்கும் அமைவிடமல்ல. நல்ல உடல் தூய்மையையும், நீர்ச்சத்தையும் பராமரிப்பது குளிர்காலத்திற்கேற்ற ஆடைகளை அணிவது, சருமப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற எளிமையான முன்தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குளிர்காலம் முழுவதிலும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். முறையான பராமரிப்பும், தூய்மையைப் பேணுவதும், குளிர்ச்சியான பருவநிலை பாதிப்பு வராமல் தடுக்கும். எனவே, இந்த குளிர்காலத்தில் ஆரோக்கியமாகவும், சௌகரியமாகவும் இதமான குளிரை அனுபவிக்க நம் உடல்நலத்தின் மீது கவனம் செலுத்துவது முக்கியம்" என்று மருத்துவர் மதுமிதா கூறினார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, November 24, 2024, 19:00 [IST]
Desktop Bottom Promotion