Thuthuvalai Rasam: வாரம் 2 முறை தூதுவளை ரசம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!

Thuthuvalai Rasam Benefits: தென்னிந்திய உணவுகளில் ரசம் மிகவும் ருசியானதும், சத்தானதும் கூட. ஏனெனில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் தேவையான சத்துக்கள் கொண்ட மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களைக் கொண்டு தான் ரசம் தயாரிக்கப்படுகிறது. இந்த ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் சளி, இருமல் பிடித்து பாடாய்படுத்தும் போது வைத்து சாப்பிடும் ஒரு வகையான ரசம் தான் தூதுவளை ரசம்.

தூதுவளை ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய மருத்துவ குணம் வாய்ந்தது. ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவத்தில் தூதுவளை மிகவும் முக்கியமான மூலிகை செடி. இந்த தூதுவளையை நாம் பலவாறு உட்கொள்ளலாம். குறிப்பாக நிறைய பேர் தூதுவளையைக் கொண்டு ரசம் வைத்து சாப்பிடுவதுண்டு. இப்படிட்ட தூதுவளையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து டாக்டர் கார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக பகிர்ந்துள்ளார்.

Doctor Reveals The Health Benefits Of Thuthuvalai Rasam

தூதுவளை

அதில் அவர் கூறியதாவது, "தூதுவளையை "நோய்களை போக்கும் தூதுவன்" என்று சொல்லலாம். இந்த தூதுவளை செடியானது ஏராளமான முட்களைக் கொண்டிருந்தாலும், அதன் இலைகள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. இந்த தூதுவளை கொடி போன்று நன்கு படர்ந்து வளரக்கூடியது.

இப்படிப்பட்ட தூதுவளையை ரசமாகவோ, துவையலாகவோ, சட்னியாகவோ சாப்பிடலாம். அதுவும் மழை அல்லது குளிர் காலங்களில் இந்த தூதுவளையை அதிகம் உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

பொதுவாக வீட்டில் நெய்யை காய்ச்சும் போது முருங்கைக்கீரையை போட்டு காய்ச்சி, பின் அந்த கீரையை சாப்பிடுவோம். ஆனால் அதே நெய்யுடன் சிறிது தூதுவளையையும் சேர்த்து காய்ச்சி, அந்த நெய்யை பயன்படுத்தும் போது, அந்த நெய்யின் மருத்துவ குணம் அதிகரிக்கும்" என்று டாக்டர் கூறினார்.

தூதுவளையின் ஆரோக்கிய நன்மைகள்

1. புற்றுநோயைத் தடுக்கும்

அனைவருக்குமே தூதுவளை சளி, இருமல் போன்றவற்றுக்கு நல்லது என்பது தெரியும். அதுமட்டுமின்றி, சமீபத்திய ஆய்வுகளில் புற்றுநோய்களுக்கு எதிராக தூதுவளையின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சொல்லப்போனால் இது நிறைய பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது என்று டாக்டர் கூறினார்.

2. கல்லீரலுக்கு நல்லது

தூதுவளை கல்லீரல் புற்றுநோய்களுக்கு எதிராக நன்றாக செயல்படுவதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதுவும் சாதாரணமாக நாம் குடிக்கும் நீரில் கூட சிறிது தூதுவளை இலையை போட்டு காய்ச்சி, அந்த நீரை குடிக்கும் போது, இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று டாக்டர் கூறினார்.

3. பசியைத் தூண்டும்

தூதுவளை குடிநீர் பசியை அதிகரிக்கக்கூடியது. பசியின்மையால் சிரமப்படுபவர்கள் இந்த நீரை குடிப்பது நல்லது. தூதுவளை சமைக்கும் போது, அத்துடன் சின்ன வெங்காயம், நல்லெண்ணெய் போன்றவற்றை சேர்க்கும் போது, இன்னும் இரட்டிப்பு நன்மைகளைப் பெறக்கூடும் என்று டாக்டர் கூறினார்.

4. அழற்சியை குறைக்கும்

தூதுவளையில் உள்ள கெமிக்கல்கள் அதிகாலையில் எழுந்ததும் சிலர் சந்திக்கும் தும்மல், அழற்சி போன்ற தொந்தரவுகளில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கிறது. மேலும் இதன் இலைகள், மலர்கள் என அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது என்று டாக்டர் கூறினார்.

5. இரத்த சர்க்கரை கட்டுப்படும்

சர்க்கரை நோயாளிகள், வாரத்திற்கு 2-3 முறை தூதுவளையை சட்னியாகவோ, ரசமாகவோ சாப்பிடலாம். இப்படி அடிக்கடி தூதுவளையை சேர்த்து வருவதன் மூலம், இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் என்று டாக்டர் கூறினார்.

6. செரிமானம் மேம்படும்

அசைவ உணவை உட்கொண்டவர்கள், உணவுக்கு பின் வெற்றி பாக்கு போடுவதற்கு பதிலாக தூதுவளை ரசத்தை சாப்பிட்டால், செரிமானம் சிறப்பாக இருக்கும் என்று டாக்டர் கூறினார். எனவே செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தூதுவளை ரசத்தை அடிக்கடி செய்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

முக்கியமாக தூதுவளையானது அனைத்து பகுதிகளிலும் கிடைக்கக்கூடியது மற்றும் வளரக்கூடியதும் கூட. மேலும் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலியை செடி. எனவே நீங்கள் உங்கள் நண்பர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்பவராயின், அவர்களுக்கு தூதுவளை செடியில் உள்ள பழங்களை எடுத்து, அதனுள் உள்ள விதைகளை காய வைத்து, அவற்றை பரிசாக வழங்குங்கள் என்றும் டாக்டர் பரிந்துரைத்தார்.

தூதுவளை ரசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்

அரைப்பதற்கு..

* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 7 பல்
* தூதுவளை - 1 கைப்பிடி

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை எடுத்து, அத்துடன் புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 2 தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, வரமிளகாய், மல்லி, துவரம் பருப்பு, பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 கைப்பிடி தூதுவளை இலைகளை சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்ததை கரைத்து வைத்துள்ள புளி கரைசலுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* இறுதியாக கரைத்து வைத்துள்ள ரசத்தை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, நுரைக்கட்ட வரும் போது அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான தூதுவளை ரசம் தயார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, November 3, 2025, 15:18 [IST]
Desktop Bottom Promotion