அதிகமா இனிப்பு சாப்பிட்டா குழந்தை பிறக்காது!

By Mayura Akilan

Fertility
குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இன்றைக்கு இனிப்பு சாப்பிடாதவர்கள் இல்லை. அந்த அளவிற்கு இனிப்பு சுவைக்கு அவர்கள் அடிமையாகியிருக்கின்றனர். சாக்லேட், கேண்டி, பேக்கரி உணவுகள், ஐஸ்கிரீம் என பலவழிகளில் சர்க்கரையானது நம் உடலுக்குள் செல்கிறது இதனால் தினசரி நூற்றுக்கணக்கான கலோரிகள் அதிகரிக்கிறது. இதனால் உடல் பருமனாவதோடு தாம்பத்ய வாழ்க்கையிலும் சிக்கல்கள் எழும் என்கின்றனர் நிபுணர்கள்.

சர்க்கரையானது நமது உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. அதுவே அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. இனிப்பு அதிகமாக சாப்பிட்டால் அது பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு உடல் பருமனாகிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

குழந்தை பருவ பருமன்

குழந்தை பருவத்திலேயே உடல் பருமன் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த சிக்கல்கள் காரணமாகவே குழந்தைகளில் இனப்பெருக்க உறுப்புக்களில் பாதிப்பு ஏற்பட காரணமாகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். அதைத்தவிர உளவியல் ரீதியான பிரச்சினைகளும், மார்பகப் புற்றுநோய், கருமுட்டையில் உற்பத்தி பாதிப்பு போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

பெண்குழந்தைகளுக்கு பாதிப்பு

உடல் பருமனானது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்கு அதிக சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அவர்களின் செக்ஸ் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரிப்பதனால் பெண்குழந்தைகளின் உடலில் மார்பகம், பிறப்பு உறுப்புகள் போன்றவைகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது. பெண்குழந்தைகளின் இந்த அதீத வளர்ச்சியே சரியான வயதாகியும் அவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படுவதை தடுக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். எனவே குறைந்த அளவில் மட்டுமே இனிப்புகளை எடுத்துக்கொள்ள குழந்தைகளை அனுமதிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

புதிய சட்டங்கள்

இது தொடர்பாக ‘The Toxic Truth About Sugar’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த கட்டுரையில் இளம் தலைமுறையானது சிகரெட், மதுபான வகைகள் போன்று சீனியையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த இனிப்பு பொருட்களுக்கு வரிவிதித்தல் உட்பட பல சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

உடல் எடை அதிகரித்தல், இருதய நோய், புற்றுநோய், ஈரல் நோய்களுக்குக் காரணமாக சீனி சேர்க்கப்பட்ட உணவு, பானங்கள் அமைவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் 35 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, May 25, 2012, 14:48 [IST]
Desktop Bottom Promotion