உங்களுக்கு செலுலைட் வந்துருச்சா... ? உடற்பயிற்சி செய்யுங்க!

By Mayura Akilan

என்னாச்சு என் உடம்புக்கு போனமாதம் கூட இப்படி இல்லையே? கண்ட இடத்தில் கொழுப்பு தேங்கி என்னைப் பார்க்க எனக்கே பிடிக்கலையே என்று புலம்புபவரா நீங்கள்? அப்படீன்னா, உங்கள் உடம்பில் செலுலைட் உருவாகியுள்ளது.

பெண்களுக்கு அதிகப்படியாக கொழுப்பு சேரும் இடம், தொடை, இடுப்பு மற்றும் பின் பகுதி தான்! இந்த கொழுப்புக்கு பெயர் தான் செலுலைட். அதாவது கெட்டியான கொழுப்பு திசுக்கள் ஆங்காங்கே தேங்கியிருக்கும். ஆயுர்வேதத்தில் செல்லுலைட் பற்றி ‘வாசா’ என்று கூறப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியின்மை

அதிக உடல் உழைப்பு இல்லாத வேலையும், உடற்பயிற்சியின்மையும் செலுலைட் உருவாக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எண்ணையில் பொரித்த உணவு, மது, கஃபைன் ( காபியில் உள்ளது) சர்க்கரை போன்றவையும் செலுலைட் உருவாக காரணம். அத்தோடு, ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவது, பரம்பரையாகவும் செலுலைட் உருவாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

அறிகுறிகள்

கப தோஷத்தினால் செலுலைட் உருவாகிறது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான அறிகுறிகளாக நம் உடம்பில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே வரிகள் ஏற்படும் சுருக்கங்கள் உருவாகும். தொட்டால் வலியை உணரலாம். கெட்டியான தசைகளில் ஊசியை வைத்து குத்தினால் வலி உணரப்படும். பின் கழுத்து வலி ஏற்படும். சளி பிடித்தது போன்று உணரப்படும். பதற்றம் ஏற்படும்.

வருமுன் காப்போம்

எந்த நோயையும் வருமுன் காப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். கொழுப்பு சத்துள்ள உணவுகளை நன்றாக சாப்பிட்டு விட்டு பின்னர் உடம்பில் கொழுப்பு கூடிவிட்டது என்று கூறுவதில் பயன் இல்லை. உணவு கட்டுப்பாட்டால் தான் செலுலைட் உருவாகுவதை தடுக்கலாம். வறுத்த, பொரித்த உணவுப் பொருட்கள், நெய், அசைவ உணவு ஆகியவற்றை சாப்பிடுவது குறைத்துக் கொள்ள வேண்டும்.

பட்டினி வேண்டாம்

செலுலைட் வந்து விட்டது என்பதற்காக எடையை குறைக்கிறேன் என்று பத்து நாள் பட்டினி கிடந்தால் நீங்கள்தான் பலவீனமாவீர்கள். உடற்பயிற்சியால் தற்போது இருக்கும் செலுலைட்டை தான் குறைக்க முடியும். ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது 1/2 மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்தால் தான் பயனளிக்கும்

யோகாசனம் நல்லது

ஆயுர்வேத மசாஜ் மூலமும், யோகாசம் மூலமும் செலுலைட் வராமல் தடுக்க முடியும். தண்ணீர் குடிப்பது குறைந்தாலும் செலுலைட் உருவாகும். அதனால் தினமும் பத்து டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.அதேபோல் மூலிகை தேநீர் அருந்துவதன் மூலம் செலுலைட் ஏற்படாமல் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தேய்த்து குளிங்க

தேங்காய் நார், பறவையின் கூடு போன்றவைகளைப் பயன்படுத்தி உடலை தேய்த்து குளிப்பது முன்னோர்களின் வழக்கம். இது எந்த அளவுக்கு நம் உடலுக்கு நல்லது என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் நார், உடலை தேய்க்கும் பிரஷ் போன்றவற்றை உபயோகிக்கவும். ஆங்காங்கே கொழுப்பு தேங்குவது தடுக்கப்படும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, April 12, 2012, 16:25 [IST]
Desktop Bottom Promotion