டைப் 1 நீரிழிவா? அதிக ஆபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்

By Mayura Akilan

Home remedies for Type 1 diabetes
திடீரென ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவது உயிருக்கு ஆபத்தாகும் என்கின்றனர் மருத்துவர்கள். டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி ஏற்படும் சர்க்கரை குறைபாட்டினை ‘ஹைபோகிளைசீமியா’ என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். சர்க்கரை அளவு குறைந்தால் ஏற்படும் பாதிப்புகளையும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான முறைகளையும் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

ரத்தத்தில் சாதரணமாக சர்க்கரையின் அளவு 70 லிருந்து 110 மில்லி கிராம்/ டெஸி லிட்டர் வரை இருக்கலாம். இந்த நிலை குறையவும் கூடாது. கூடவும் கூடாது. ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று குறைந்தவுடனே, உடல் உடனே ‘எபினெப்ரின்’ என்ற ஹார்மோனை அட்ரீனல் சுரப்பி மூலம் சுரக்கும். இது உடனே சர்க்கரையை உடலிலிருந்து ‘ரிலீஸ்’ செய்யும். கூடவே, அதிக வியர்வை, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், மயக்கம், படபடப்பு மனக்குழப்பம் இவற்றை உண்டாக்கும். பசி அதிகமாக ஏற்படும். தொடர்ந்து சர்க்கரை அளவு குறைய, குறைய, களைப்பு, தலைவலி, குழப்பம், கண்பார்வை மங்குதல், குடிகாரன் போல் இயல்பு மாறிய நடவடிக்கை, சுய நினைவை இழத்தல், மயங்கி விழுதல், கோமா போன்றவை ஏற்படும்.

சர்க்கரை குறைய காரணம்

ஹைபோகிளை சீமியா, டைப் – 1 (இன்சுலீன் ஊசி போட்டுக் கொள்ளும்) சர்க்கரை நோயாளிகளை அடிக்கடி பாதிக்கும். டைப் – 2 நோயாளிகளை மிகக் குறைவாகவே தாக்குகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு வியாதிக்காக உட்கொள்ளும் மாத்திரைகளால் ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து விடும். வேறு வியாதிகளுக்காக கொடுக்கப்படும் (நீயுமோனியா, க்வுனைன் மருந்துகளாலும் ஹைபோகிளைசிமீயா ஏற்படலாம்.இன்சுலின் அளவு அதிகமானால், போட்டுக் கொள்ளும் இன்சுலீன் ‘டோஸ்’ அதிகமானால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

விரதம் இருந்தாலோ அல்லது இருவேளை சாப்பாட்டுக்கு இடையே அதிக நேர இடைவெளி நேர்ந்தால் சர்க்கரை குறையும். அதேபோல் கார்போ-ஹை-டிரேட்ஸ் குறைந்த சில உணவுகளை (ப்ருக்டோஸ், காலக்டோஸ், அமினோ அமிலங்கள்) சீரணிக்க முடியாமல் போதல்

அதிகமான உடற்பயிற்சி, வெறும் வயிற்றில் மது அருந்துவது, அதுவும் சர்க்கரை செறிந்த மதுபானங்கள் போன்றவைகளினாலும், கணையத்தில் கட்டி அட்ரீனலின், பிட்யூடரி குறைவாக சுரப்பது போன்றவைகளினாலும் ஹைபோ கிளைசீமியா ஏற்படும்.

எப்போது ஏற்படும்?

ஹைபோ கிளைசீமியா கடும் உடற்பயிற்சியின் போதும், நடு இரவிலும் ஏற்படும். பகலில் 11 மணி – 12 மணி, மாலை 4.30 முதல் 6.30 மணி வரை ஏற்படலாம். அதிகாலை நேரங்களிலும் ஏற்படலாம்.

உடனடித் தேவை

வீட்டில் உள்ள பொருட்களே இதற்கு நிவாரணம் தருபவையாக உள்ளன. ஹைபோகிளைசீமியா அறிகுறிகள் தெரிந்த உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரை / குளூக்கோஸ், போன்றவற்றை நீரில் கரைத்து கொடுக்கவும். கற்கண்டு கட்டிகள் 2 அல்லது 3 கொடுக்கலாம். அறிகுறிகள் உடனே மறையும்.பழச்சாறு கூட கொடுக்கலாம். நீடித்தால் இன்னும் சர்க்கரையை கொடுக்கவும் பிறகு ரொட்டி போன்றவற்றை தரலாம்.

ஹைபோகிளைசீமியா அறிகுறிகளை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு, அவை தோன்றியவுடனே இவற்றை சாப்பிட வேண்டும். இல்லாவிடில் அதிகநேரம் தாழ்சர்க்கரை நிலை நீடித்தால் மூளை பாதிக்கப்படும்.இதனால் தான் சர்க்கரை நோயாளிகள், எப்போதும் சர்க்கரை, சாக்லேட், கற்கண்டு போன்றவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஹைபோகிளைசீமியா என்ற உயிருக்கு ஆபத்தான நிலை, ஒரு ‘வாய்’ சர்க்கரையால் சரி செய்ய முடிவது ஒரு அதிசயம் தான். எனினும் அந்த நிலை வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் நாள்தோறும் குறித்த வேளையில் உணவு உட்கொள்ளவது அவசியம் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, April 5, 2012, 15:19 [IST]
Desktop Bottom Promotion