நீரிழிவைத் தவிர்க்கனுமா... பஸ்சிமோத்தாச்சனம் பண்ணுங்க!

By Mayura Akilan

Paschimottaasana
யோகாசனம் மூலம் மன அழுத்தம் குறைகிறது. எந்த வித நோய் ஏற்பட்டாலும் அதை யோகாசனம் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. நோய்கள் வந்த பின் அவற்றை கட்டுப்படுத்த போராடுவதை வித நோய் வரும்முன் தடுப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அந்த வகையில் பஸ்சிமோத்தாசனம் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுப்பதாக ஆசனங்களை கற்பிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 5 ல் மூன்று பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாறிவரும் வாழ்க்கை முறையால் இன்னும் பல லட்சம் பேர் நீரிழிவு நோய் தாக்குதலுக்கு ஆளாகும் சூழ்நிலையில் உள்ளனர். நீரிழிவினை நோய் என்பதை விட குறைபாடு என்றுதான் கூறவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே யோகாசனங்கள் மூலம் நீரிழிவு ஏற்படாமல் தடுக்கமுடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு தடுக்கப்படும்

பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுப்பதோடு ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்றும் யோகாசன வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது.

மலட்டுத்தனம் நீங்கும்

இந்த ஆசனத்தின் மூலம் ஆண்மை அதிகரிக்கிறது. மலட்டுத் தனம் நீங்குகிறது. பெண்களிடத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் பூரணமாக குணமாகி விடும். இடுப்பு வலுவடையும். இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால் இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும். மனதை ஒருமுகப்படுத்த இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

அறுவைச் சிகிச்சை

இந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை நடந்து குறிப்பிட்ட காலங்கள் ஆகி இருந்தால் சிறந்த ஆசன நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று ஆசனத்தை செய்யலாம். வழக்கமாக ஆசனத்தை செய்து வரும் கர்ப்பிணிகள் ஆசனத்தை முழுமையாக செய்யாமல் உட்கார்ந்த நிலையில் காதுகளை ஒட்டி கைகளை நிமிர்த்திய நிலையில் ஆசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும். முன்பக்கம் குனிந்து முழங்காலை தொடும் நிலைக்கு போகக் கூடாது. ஆசனங்களை பழக்கமில்லாத புதிய கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை எக்காரணம் கொண்டு செய்யக் கூடாது.

வலிகள் சரியாகும்

இந்த ஆசனத்தை செய்வதும் எளிது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ஆசனத்தை செய்வதில் முதலில் சிரமங்கள் ஏற்படலாம். நாளடைவில் முறையான பயிற்சி செய்தால் எளிதாக வந்து விடும். சிலருக்கோ, கைகளை மேலே காதுகளை ஒட்டினாற் போல் வைத்துக் கொண்டு எழுந்திருக்க முடியாது. கைகளை முன்னுக்கு வீசி பேலன்ஸ் செய்து எழுந்திருந்தால் தான் எழுந்திருக்க முடியும். இதுவும் நாளடைவில் சரியாகி விடும்.

சிலருக்கு கால் விரல்களை கைகளால் தொட முடியாது. பொதுவாகவே முதுகெழும்பு கட்டை பாய்ந்து விட்டிருப்பதால் தான் இப்படி முன்னோக்கி குனிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் பழக பழக கால் விரல்களை கைகளால் பிடித்து விடலாம். சிலருக்கு கால் விரல்களை பிடிக்க முயலும் போது முழங்கால் தூக்கிக் கொள்ளும். ஆனால் முழங்கால் மடிக்காமலேயே கூடுமான வரை குனிந்து தொட முயற்சிக்க வேண்டும். இப்படி பழகி வரும் போது தொடையில் உள்ள தசைகளும், நரம்புகளிலும் வலி ஏற்படுவதுண்டு. ஆனால் சில நாட்களில் சரியாகி விடும். சிலருக்கு முழங்காலில் முகத்தை கொண்டு வைக்க முடியாது. இதுவும் விடா முயற்சியுடன் பழகும் போது சரியாகி விடும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, April 23, 2012, 10:22 [IST]
Desktop Bottom Promotion