சாதம் சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அதிகரிக்கக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற மாதிரி சாப்பிடுங்க..

Diabetes And Rice: உலகளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் உலகிலேயே சீனாவிற்கு அடுத்ததாக இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் டைப்-2 நோயாளிகளின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளனர்.

டைப்-2 சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட நிலை. இந்நிலையில் உடலால் போதுமான இன்சுலின் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியாமல் போகும். இதில் இன்சுலின் என்பது ஆற்றலுக்காக குளுக்கோஸை செல்களுக்குள் செல்ல உதவும் ஒரு ஹார்மோன் ஆகும். இப்படி இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது, அந்த க்ளுக்கோஸ் இரத்தத்திலேயே தங்கி இரத்த சர்க்ரை அளவை அதிகரித்துவிடும்.

Diabetes And Rice Doctor Shares Healthy Ways To Eat Rice Without Raising Blood Sugar

இப்படிப்பட்ட சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், அந்நபர் தாங்கள் உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இத்தகையவர்கள் குறிப்பிட்ட உணவுகளை தொடக்கூடாது. மேலும் சில உணவுகளை அதிகமாக உட்கொள்ளாமல் அளவாக எடுக்க வேண்டும். அப்படியான ஒரு உணவு தான் சாதம்.

இந்தியர்களாக இருந்தால், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தால், சாதத்தை சாப்பிடாமல் இருக்க முடியாது. உங்களுக்கும் அப்படி தானா? ஆனால் உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா? இதனால் சாதத்தை சாப்பிட முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால் இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஏனெனில் சர்க்கரை நோய் நிபுணரான டாக்டர் அருண் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் சாதம் சாப்பிடுவதற்கான 5 வழிகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

1. அரிசியின் அளவு

சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் சாதத்தை சாப்பிட நினைத்தால், உட்கொள்ளும் அரிசியின் அளவை கவனிக்க வேண்டும். அதுவும் நீளமான அரிசியை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அரிசி எவ்வளவு நீளமாக உள்ளதோ, அந்த அளவில் இரத்த சர்க்கரை அதிகரிக்கும் தன்மை குறைவாக இருக்கும். எனவே பாசுமதி அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. அதே சமயம் குருணை அரிசியில் சர்க்கரை அதிகமாக இருக்கும் என்று டாக்டர் கூறினார்.

2. அரிசியின் நிறம்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் இருக்க அரிசியின் நிறத்தை கவனிக்க வேண்டும். அரிசி எவ்வளவு நிறம் அதிகமாக உள்ளதோ, அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாக இருக்கும். வெள்ளை அரிசியால் சர்க்கரை அதிகரிக்கிறது என்றால், கைக்குத்தல் அரிசியில் சர்க்கரை அதிகரிக்கும் திறன் சற்று குறைவாக இருக்கும். அதுவே கருப்பு அரிசியில் இன்னும் குறைவாக இருக்கும் என்று டாக்டர் கூறினார்.

3. பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி

எவ்வளவுக்கு எவ்வளவு அரிசியை புழுங்க வைக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. பச்சரிசியில் மேலே உள்ள லேயர் பாலிஷ் செய்து முழுமையாக நீக்கப்பட்டுவிடுகிறது. இதனால் அதை உட்கொள்ளும் போது, அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆனால் புழுங்கல் அரிசியில் இரத்த சர்க்கரை அளளை அதிகரிக்கும் தன்மை சற்று குறைவாக இருக்கும் என்று டாக்டர் கூறினார்.

4. பழைய சாதம் அல்லது புதிய சாதம்

புதிதாக சமைத்த சாதத்தை விட, பழைய சாதம் சிறந்தது. எனவே இதுவரை சாதம் மீந்து போயிருந்து, அதை தூக்கி எறிந்திருந்தால், இனிமேல் அப்படி செய்யாதீர்கள். முடிந்தால் அப்படி மீந்த சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து, மறுநாள் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் அதிகமாக இருக்கும் என்று டாக்டர் கூறினார்.

5. காய்கறிகளை அதிகம் உண்ணவும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எப்போது சாதம் சாப்பிடும் போதும், 1 பங்கு சாதத்திற்கு 2 பங்கு காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இப்படி சாப்பிட்டால், எவ்வளவு சப்பிட்டாலும், சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று டாக்டர் கூறினார்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிகளை சர்க்கரை நோய் உள்ள ஒருவர் தவறாமல் பின்பற்றி வந்தால், தினமும் சாதம் சாப்பிட்டுக் கொண்டே இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் தடுக்கலாம் என்று டாக்டர் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, September 22, 2025, 16:04 [IST]
Desktop Bottom Promotion