மழையால் சைனஸ் பிரச்சனை பாடாய் படுத்துதா? உடனடி நிவாரணம் பெற இத செய்யுங்க...

Chennai Rain: தற்போது வட தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், நிறைய பேர் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். முக்கியமாக சைனஸ் பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் அதிகம் சிரமப்படுவார்கள். சொல்லப்போனால் வலியிலேயே சைனஸ் வலி மிகவும் கொடியது என்று கூறுவார்கள்.

சைனஸ் என்பது முகத்தில் காணப்படும் நான்கு ஜோடி சுரப்பிகளாகும். இது சுவாச மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இந்த சைனஸ் சுரப்பிகளும் நான்கு குறுகிய சேனல்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சேனல்கள் ஒரு வடிகால்களாக செயல்பட்டு, மூக்கை சுத்தமாகவும், பாக்டீரியாக்களின்றியும் வைத்திருக்கின்றன.

Chennai Rain: Home Remedies to Treat Sinusitis Naturally In Tamil

இந்த சேனல்கள் திரவத்தால் நிரப்படும் போது, இவற்றில் தொற்றுகள் ஏற்பட்டு, மூக்கடைப்பு ஏற்பட செய்கின்றன. இந்த சேனல்களில் நீர் தேங்கும் போது, அங்கு கிருமிகள் வளர்ந்து, சைனசிடிஸ் என்னும் சைனஸ் தொற்றை ஏற்படுத்துகின்றன.

பெரும்பாலும் சைனஸ் பிரச்சனைகளானது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருந்தால் தலைத் தூக்கும். சைனஸ் பிரச்சனை இருந்தால், அது மூக்கு பகுதிகளில் கடுமையான வலியையும், ஒருவித அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை உள்ளதா? அதனால் அதிகம் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அந்த சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில இயற்கை வைத்தியங்களை இப்போது காண்போம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் ஏராளமான மருத்துவ பண்புகளை தன்னுள் கொண்டுள்ளன. முக்கியமாக இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளதால், இது சளி, இருமல், அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவி புரிகிறது. அதற்கு ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடிக்கும் போது, அது உடலினுள் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, விரைவில் குணமாக வழிவகை செய்யும்.

ஆவி பிடிப்பது

சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டுமானால், முதலில் செய்ய வேண்டியது நல்ல சூடான நீரில் ஆவி பிடிப்பது தான். இப்படி ஆவி பிடிக்கும் போது, சுவாச பாதையில் உள்ள சளி இளகி, வீக்கம் குறைந்து சுவாச பாதை விரிவடைந்து, சைனஸ் பிரச்சனையால் சந்திக்கும் வழியில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும். அதுவும் நல்ல சூடான நீரில் சிறிது யூகலிப்டஸ் தைலத்தை சேர்த்து, அந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்யும் போது சுவாச பாதையில் உள்ள அடைப்பு உடனே நீங்கும்.

மஞ்சள்

சமையலறையில் இருக்கும் ஒரு பொதுவான பொருள் தான் மஞ்சள் தூள். இது உணவிற்கு நிறத்தை தருவதைத் தவிர, ஏராளமான மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டது. முக்கியமாக இதில் ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளன.

இதனால் மஞ்சள் சைனஸ் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சுடுநீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சுவாச பாதையில் உள்ள சளி இளகி வெளியேறி, சுவாச பாதை சுத்தமாகும்.

யூகலிப்டஸ் ஆயில்

நல்ல நறுமணத்தைக் கொண்ட யூகலிப்டஸ் ஆயில் சைனஸ் பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. மேலும் இது சுவாச மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. அதற்கு யூகலிப்டஸ் ஆயில் சில துளிகளை ஒரு கைக்குட்டையில் ஊற்றி, அதை அடிக்கடி சுவாசிக்க வேண்டும். இப்படி சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது செய்து வந்தால், சுவாச பாதையில் உள்ள அடைப்புகள் நீங்கி, சுவாச பாதை சுத்தமாக இருக்கும்.

மிளகு

சமையலறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் தான் மிளகு. இந்த மிளகும், மஞ்சளைப் போன்று ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. இந்த மிளகை சரியான வழியில் பயன்படுத்தி வந்தால், சைனஸ் மற்றும் சுவாச பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அதுவும் சைனஸ் பிரச்சனையால் அதிகம் அவதிப்படும் போது, ஒரு டம்ளர் சுடுநீரில் சிறிது மிளகுத் தூளை சேர்த்து கலந்து குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். வேண்டுமானால், அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion