வெயிலில் சுற்றி விட்டு வீட்டிற்கு வந்ததும் இந்த விஷயங்களை செய்ய மறக்காதீங்க...

Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துள்ளதால், பகல் வேளையில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவாகி வருகிறது. என்ன தான் வெயில் அதிகமாக இருந்தாலும், நம்மால் வீட்டிற்குள்ளேயே இருக்க முடியாது அல்லவா? வேலை காரணமாக வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம்.

கோடையில் வெளியே செல்லும் முன், சரும பாதுகாப்பிற்கு எப்படி தவறாமல் சன் ஸ்க்ரீன் தடவ வேண்டுமோ, அதேப் போல் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், ஒருசில விஷயங்களை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இதனால் வெயிலால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம். இப்போது சருமத்தின் ஆரோக்கியத்திற்காக வெளியே வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் எந்த மாதிரியான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.

Summer Skin Care Tips: Things You Must Do After Sun Exposure In Tamil

நிறைய தண்ணீர் குடிக்கவும்

பொதுவாக வெயிலில் சுற்றும் போது, அதிகப்படியான வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வையின் வழியே வெளியேற்றப்பட்டு, உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைந்து அதிக தாகத்துடன், உடல் வறட்சியையும் சந்திக்க நேரிடும். எனவே வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், போதுமான அளவு நீரைக் குடிக்கும் போது, இழந்த நீர்ச்சத்து மீண்டும் உடலுக்கு கிடைத்து, உடல் மீண்டும் புத்துயிர் பெறும்.

கிளின்சிங்

சருமத்தின் உள்ள அழுக்கை வெளியேற்ற மேற்கொள்ளும் ஒரு செயல்முறை தான் கிளின்சிங். வெளியே தூசி நிறைந்த சூழலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், கிளின்சிங் செய்யாவிட்டால், சருமத்துளைகளில் அழுக்குகள் தங்கி அடைப்புக்களை ஏற்படுத்தி, முகப்பரு போன்றவற்றை உண்டாக்கும். எனவே சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்ற ஃபேஸ் வாஷ், கிளின்சிங் லோஷன் போன்றவற்றை பயன்படுத்தி சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்ற உதவும் சிறந்த நேச்சுரல் கிளின்சர் என்றால், அது பால். அதற்கு பாலை முகத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.

சருமத்தை குளிரூட்டவும்

வெளியே வெயிலில் சுற்றும் போது, சூரியக் கதிர்களின் தாக்கத்தால் சரும செல்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இப்படி பாதிக்கப்பட்ட செல்கள் மேலும் சேதமடையாமல் இருக்க வீட்டிற்கு வந்ததும், சரும செல்களை குளிர்ச்சியடையச் செய்யும் வகையில், கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ஸ்க்ரப் செய்யவும்

வெளியே நீண்ட நேரம் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யவும் ஸ்கரப் அல்லது ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். இதனால் வெயிலால் பொலிவிழந்த சருமம் பொலிவோடு அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் ஸ்கரப்பை வாரத்திற்கு 2 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் மற்றும் வாரம் ஒருமுறை தவறாமல் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.

டோனர், சீரம் பயன்படுத்தவும்

வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், சருமத்தை சுத்தம் செய்த பின்னர், புற ஊதா கதிர்களால் சருமத்தில் அதிக சேதம் ஏற்படாமல் இருக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த டோனர், சீரம் மற்றும் மாய்ஸ்சுரைசர்ப் பயன்படுத்த வேண்டும். இதனால் அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதோடு, சருமம் சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது.

Story first published: Saturday, April 1, 2023, 20:26 [IST]
Desktop Bottom Promotion