பனிகாலத்துல சருமம் பொலிவிழந்து இருக்கா? ஆரஞ்சு ஃபேஸ் பேக் போடுங்க...

By Maha

Homemade Orange Face Packs
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு குளிர் காலத்தில் அதிகம் கிடைக்கும். இது மிகவும் சுவையோடு இருப்பதோடு, இதனை வைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக்குகளை போட்டால், சருமம் நன்கு இறுக்கமடைந்து, இளமையோடு காணப்படும். அதிலும் இது இந்த குளிர்காலத்தில் அதிகம் கிடைப்பதாலும், சருமம் அதிகம் பொலிவிழந்து காணப்படுவதாலும், கடைகளில் அதிகம் விற்கும் ஆரஞ்சு பழங்களை வாங்கி, பழத்தை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதோடு, அதன் தோலை தூக்கிப் போடாமல், அவற்றை வைத்து சருமத்தை அழகுப்படுத்தலாம். சரி, அப்போது அந்த ஆரஞ்சு பழத்தை வைத்து எப்படியெல்லாம் சருமத்தை அழகாக்கலாம் என்று பார்ப்போமா!!!

ஆரஞ்சு பேக்: இந்த ஃபேஸ் பேக் போடுவது மிகவும் எளிது. இதற்கு எந்த ஒரு பொருளையும் சேர்த்து அரைத்து போட வேண்டுமென்ற அவசியம் இல்லை. இந்த ஃபேஸ் பேக்கில் ஆரஞ்சு பழத்தில் சாறு மற்றும் உள்ளே உள்ள பல்ப்பை வைத்து மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், சருமம் நன்கு இறுக்கமடைந்து, அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை பொலிவாக்கி, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்து வந்தால் நல்லது.

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மில்க் கிளின்சர்: சருமத்தை சுத்தம் கிளின்சர் மிகவும் முக்கியமானது. அதிலும் வீட்டிலேயே கிளின்சர் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றை நீக்கும். அதற்கு ஆரஞ்சு ஜூஸ் உடன், மில்க் கிளின்சரை கலந்து முகத்தில் தடவி ஒரு நிமிடத்திற்கு மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு ஈரப்பசையுடன், பளிச்சென்று காணப்படும்.

ஆரஞ்சு தோல் மற்றும் தயிர்: இந்த வகையான ஃபேஸ் ஸ்கரப் மிகவும் பிரபலமானது. இதனை ஆண்களும் செய்யலாம். அந்த ஸ்கரப்பிற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து, பின் அதனை பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் தயிருடன், 1/2 டீஸ்பூன் ஆரஞ்சு பவுடரை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, பின் காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை இருப்பவர்கள், இந்த கலவையுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, செய்தால் நல்லது.

ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை மற்றும் தயிர்: எலுமிச்சை மற்றும் தயிர் தான் வீட்டில் தயாரிக்கும் ஃபேஸ் பேக்கிற்கு மூலதனப் பொருள். ஆகவே அத்துடன் சிறிது ஆரஞ்சு ஜூஸை சேர்த்து, முகத்திற்கு போட்டால், சருமம் நன்கு பொலிவுடன் அழகாகக் காணப்படும். மேலும் சருமத்தில் இருக்கும் பழுப்பு நிறமும் மறைந்துவிடும்.

ஆரஞ்சு தோல் மற்றும் ஓட்ஸ்: இது ஒரு ஈஸியான ஒரு ஸ்கரப். இந்த ஸ்கரப்பை செய்தால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கிவிடும். அதற்கு ஆரஞ்சு தோலை காய வைத்து பொடி செய்து, ஓட்ஸ் உடன் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை ஸ்கரப் செய்தால், சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும்.

ஆகவே இந்த குளிர்காலத்தில் மேற்கூறிய ஃபேஸ் பேக்குகளை போட்டு, முகத்தை அழகாகவும் பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள்.

Desktop Bottom Promotion