கோடையில் சருமத்தை காக்க ஜில் ஜில் கூல் கூல் ஆயுர்வேத மசாஜ்

By Mayura Akilan

Skin Care
அக்னி நட்சத்திரத்தின் இறுதியில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. வெளியே போனால் மட்டுமல்ல வீட்டிற்குள் இருந்தாலே எரிச்சலும் சருமத்தில் வறட்சியும் ஏற்படுகிறது. எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் வியர்வையாக வெளியேறி விடுகிறது. எனவே கோடையில் சருமத்தை பாதுகாத்து பொலிவாக்க ஆயுர்வேத நிபுணர்கள் கூறும் ஆலோசனையை கேளுங்களேன்.

மழை, பனி காலங்களை விட சருமம் அதிகம் பாதிக்கப்படுவது கோடையில்தான். சருமத்தில் உள்ள நீர்சத்து குறைவதால் சருமம் பொலிவிழக்கும், கருமையாகும். சருமம் மட்டும் இல்லாமல் தலைமுடி கை, கால்களும் கூட வறண்டு பாதங்களில் வெடிப்பு ஏற்படும். அதை சமாளிக்க வெயில் காலத்துக்கு சருமத்தை கவனிக்க வேண்டும்.

நீர்ச்சத்தான காய்கறிகள்

கோடை சீசனில் கிடைக்கும் காய்கறிகள், பழங்களை தவிர்க்காமல் சாப்பிடவேண்டும். லெட்டூஸ், கேரட், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் இழந்த நீர்ச்சத்து உடலில் சமமாகும். இதனால் சருமம் வறட்சியடைவது தடுக்கப்படும்.

ஒமேகா 3 கொழுப்பு அடங்கிய உலர் பழங்கள், விதைகளை சாப்பிடலாம். கடல் உணவுகள் சரும ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அதேபோல் மத்தியான நேரத்தில் உணவு உண்டபின்னர் இஞ்சி, எலுமிச்சை கலந்த மூலிகை டீ குடிக்கலாம். சருமத்திற்கு மட்டுமல்லாது உணவிற்கு ஜீரணசக்தியை தரும்.

உடற்பயிற்சி செய்யுங்க

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறுகிறது. இதுவும் சரும பாதுகாப்பிற்கு ஏற்றது. தேவையற்ற கழிவுகள் தங்கினால்தான் சருமம் பொலிவு குறைந்து கருமையாக இருக்கும். எனவே யோகா, ஜாகிங், டான்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் சரும அழகை பாதுகாக்கலாம். அதேபோல் இதமான மாலை நேர சூரிய ஒளியில் அமர்ந்து மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சருமத்திற்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும்.

ஆயில் மசாஜ்

சரும வறட்சிக்கு ஆயில் மசாஜ் செய்யலாம். வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் இரவு நேரத்தில் ஆப்ரிகாட் ஆயில் தேய்த்து மசாஜ் செய்யலாம் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் நம் ஊர் பக்கம் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். அது உடல் சூட்டை தணிக்கும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். மருதாணி மற்றும் செம்பருத்தி கொண்டு செய்யப்படும் ஆயில் மசாஜ், தலைமுடியின் நிறத்தை கூட்டி நன்கு ஊட்டமளிக்கும். இதில் உள்ள இயற்கை கண்டிஷன் முடிகளை பளபளப்பாக்கும்.

ஜில் ஜில் பேசியல்

தர்பூசணி மற்றும் செர்ரி பழங்களின் கலவை கொண்டு பேஷியல் செய்யலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியோடு காட்சியளிக்கும். இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் வெப்பத்தால் ஏற்படும் கருமையை போக்கி பளபளப்பாக்கி, ஈரப்பதம் அளித்து ஆரோக்கியமாக்கும். தாராளமாக தண்ணீர் குடியுங்கள். உங்கள் கண்ணைச் சுற்றி கருவளையம் ஏற்படாமல் இருக்க இதுவே வழிகேரட் சாறுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் பளிச் முகம் உங்களுடையதுதான்

Story first published: Saturday, May 26, 2012, 13:14 [IST]
Desktop Bottom Promotion