பொங்கல் பண்டிகையில் பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த பியூட்டிஷியன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க..

Pongal 2025: பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை அன்று அழகாக ஜொலிக்க வேண்டுமென்று அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறையினால், அழகு நிலையங்களுக்கு சென்று சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் அளவில் நேரம் இருப்பதில்லை. உங்களின் நிலையும் அது தானா?

அதற்காக பொங்கல் அன்று புத்தாடை அணிந்திருக்கும் போது முகம் மட்டும் பிரகாசமாக இல்லாமல் டல்லாக இருந்தால், நன்றாக இருக்குமா? நிச்சயம் இல்லை தானே? இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்க வேண்டுமானால், ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுக்கலாம்.

Pongal 2025 Beautician Tips To Look Bright And Beautiful During Pongal Festival

உங்களின் வசதிக்காக பியூட்டிஷியன் அபிநயா பொங்கல் பண்டிகை காலத்தில் அழகாக காட்சியளிக்க ஒருவர் எந்த பொருட்களை எல்லாம் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பை கொடுக்கலாம் என்பது குறித்து தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். அதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

கற்றாழை

சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் கற்றாழை பெரிதும் உதவி புரிகிறது. ஒருவர் கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு தினமும் சருமத்திற்கு பராமரிப்பை கொடுத்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

அதுவும் பிரஷ்ஷான கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால், கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டாம். இந்த கற்றாழை பேக்கை தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, ஒரு நல்ல மாற்றத்தை காணலாம் என்று அபி கூறினார்.

கடலை மாவு

கற்றாழைக்கு அடுத்தபடியாக சருமத்தின் அழகை மேம்படுத்த கடலை மாலை பயன்படுத்தலாம். அதுவும் கடலை மாவுடன் சிறிது தக்காளி சாறு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக கடலை மாவைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது சிறந்த பலனைப் பெற வேண்டுமானால், யாருடனும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் கடலை மாவு ஃபேஸ் பேக்கை பிம்பிள் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால் பிம்பிள் இன்னும் அதிகமாகிவிடும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, நல்ல பொலிவைத் தரும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து, அதை முகத்தில் தடவி 10 நிமிடம் காய வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்தி வந்தாலே முகம் பளிச்சென்று இருக்கும்.

சர்க்கரை, தேன்

மூக்கைச் சுற்றி அல்லது மூக்கின் மேல் கரும்புள்ளிகள் அல்லது வெள்ளைப் புள்ளிகளை அதிகம் கொண்டிருந்தால், ஸ்க்ரப் பயன்படுத்தலாம். அதுவும் சர்க்கரை நீரைக் கலந்து, அதை தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்து கழுவலாம். இல்லாவிட்டால் சர்க்கரையுடன் தேனை சேர்த்து கலந்து, ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம் என்று அபி கூறினார்.

உளுந்து

உளுத்தம் பருப்பும் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தை காட்டும். அதற்கு உளுத்தம் பருப்பை நீரில் ஊற வைத்து அரைத்து, அத்துடன் சிறிது பாலை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்தி வந்தாலும் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முக்கியமாக, எந்த ஒரு ஃபேஸ் பேக்கை போடுவதாக இருந்தாலும், முதலில் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்துவிட்டு, பின் ஃபேஸ் பேக்கை போட்டால், அந்த ஃபேஸ் பேக்கின் முழு பலனைப் பெறலாம் என்று பியூட்டிஷியன் அபிநயா கூறினார்.

Story first published: Sunday, January 12, 2025, 22:20 [IST]
Desktop Bottom Promotion