கூந்தல் பராமரிப்பில் கடுகு எண்ணெயின் நன்மைகள்!!!

By Maha

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. பொதுவாக இந்த எண்ணெயை நல்ல சுவையான உணவுகள் சமைக்க பயன்படுத்தினால், நல்ல அருமையான சுவையை பெறலாம். அதே சமயம் இதனை உடல் வலி இருக்கும் போது, உடலுக்குத் தடவி மசாஜ் செய்தால், உடல் வலியும் நீங்கும். மேலும் குளிர் காலங்களில் தினமும் காலையில் இந்த எண்ணெயை உடலில் பூசி குளித்து வந்தால், உடல் வெதுவெதுப்பாக இருப்பதோடு, மூட்டு வலிகளும் நீங்கும். ஆகவே இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.

அதிலும் வறட்சியான சருமம் மற்றும் கூந்தல் இருந்தால், அதனைப் போக்குவதற்கு கடுகு எண்ணெய் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக, கடுகு எண்ணெயில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது பொடுகுத் தொல்லையையும் நீக்கும். சரி, இப்போது அந்த கடுகு எண்ணெயை எப்படியெல்லாம் கூந்தலுக்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

Mustard Oil

* வெதுவெதுப்பான கடுகு எண்ணெய்: கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். மேலும் காய்ச்சல் அல்லது சளி இருந்தால், இரவில் படுக்கும் போதே எண்ணெயை தலையில் தடவி படுக்க வேண்டும். இதனால் உடலானது சற்று வெதுவெதுப்புடன் இருக்கும்.

* கடுகு எண்ணெய் கண்டிஷனர்: இது ஒரு கண்டிஷனர் போன்றும் பயன்படுகிறது. எப்படியெனில் கடுகு எண்ணெயை கூந்தலுக்கு தடவினால், கூந்தல் வறட்சியின்றி பொலிவோடு காணப்படும். அதிலும் இந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் தடவி, ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து தலையில் சுற்றி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், எண்ணெயானது தலையில் நன்கு உறிஞ்சப்படுவதோடு, குளித்தப் பின் வறட்சியில்லாமல் இருக்கும்.

* கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை: பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, இந்த முறை சரியாக இருக்கும். அதற்கு கடுகு எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

* கடுகு எண்ணெய் மற்றும் தயிர்: கூந்தல் நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும் இருப்பதற்கு, கடுகு எண்ணெயை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

இவையே கடுகு எண்ணெயை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தும் போது கிடைக்கும் நன்மைகள். எனவே இவற்றை முயற்சி செய்து கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து, பட்டுப் போன்ற கூந்தலைப் பெறுங்கள்.

Story first published: Thursday, March 7, 2013, 14:26 [IST]
Desktop Bottom Promotion