கூந்தல் ஆரோக்கியமா இல்லையா? இதெல்லாம் சாப்பிடுங்க...

By Maha

Healthy Hair
எப்போது பார்த்தாலும், என்ன தான் கூந்தலை முறையாக பராமரித்தாலும், கூந்தல் உதிர்ந்து கொண்டே உள்ளதா? அதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற டயட்டில் இருப்பது, வைட்டமின் குறைபாடு. மேலும் அதிக மனஅழுத்தம், கவலைகள், டைபாய்டு, அனிமியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தாக்குதல், சரியான இரத்த ஓட்டம் உடலில் இல்லாதது, மயிர்க்கால்கள் சுத்தமாக இல்லாதது போன்றவைகளும் சில காரணங்களாகும்.

அதிலும் கூந்தல் உதிர்தல் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. அவர்கள் என்னதான் கூந்தலை பராமரித்தாலும், சத்துக்கள் உடலில் இல்லையென்றால் கூந்தல் உதிரிந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே அத்தகைய சத்துக்கள் உடலில் கிடைக்க என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்று பார்ப்போமா!!!

* தினமும் ஒரு டம்ளர் தண்ணீருடன் ஆளிவிதையை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதனால் உடலில் தேவையான அளவு ஒமேகா 3 ஆசிட் கிடைப்பதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.

* ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காயை சாப்பிட வேண்டும். நெல்லிக்காயில் கூந்தல் நன்கு வளர்வதற்கான சத்துக்கள் அதிகம் உள்ளன. சொல்லப்போனால் தலைக்கு தேய்க்கும் எண்ணெயைக் கூட நெல்லிக்காய் வைத்து தான் தயாரிக்கிறார்கள்.

* இரவில் படுக்கும் முன் 5 பாதாம் பருப்புகளை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து தோலோடு அதனை சாப்பிட வேண்டும்.

* மயிர்கால்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியமாகிறது. ஆகவே தினமும் சிறிதளவாவது மோர், எலுமிச்சை ஜூஸ், தேங்காய் நீர் போன்றவற்றை உடலில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் தினமும் 8-10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

* ஒரு பௌல் முளைகட்டிய பயிர் வகைகளை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, கூந்தலும் நன்கு அழகாக ஆரோக்கியமாக வளரும்.

* புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன் சிக்கன் மற்றும் முட்டையில் அதிகம் உள்ளது. ஆகவே அதனை தினமும் சிறிது சேர்த்தால் நல்லது.

* தினமும் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். பால் குடிக்கலாம், ஆனால் அதிகமாக அளவு குடிப்பது நல்லதல்ல. ஒரு நாளைக்கு 2 டம்ளர் பாலை குடித்தால் போதுமானது.

* எப்போது கூந்தலை நீரில் அலசினாலும், இறுதியில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை, நீரில் கலந்து கூந்தலில் விட்டு ஒரு முறை அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு பளபளப்போடு இருப்பதுடன், பொடுகு ஏற்படாமல் இருக்கும்.

* வாரத்திற்கு ஒரு முறை வெந்தயத்தை அரைத்து, அதனை மயிர் கால்களில் தடவி குளிக்க வேண்டும். அதிலும் வெறும் வயிற்றில் வெந்தயத்தை தண்ணீருடன் சாப்பிட வேண்டும்.

* ஒரு நாளைக்கு குறைந்தது 2 அல்லது 3 பழங்களை சாப்பிட வேண்டும். அதிலும் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், சப்போட்டா மற்றும் திராட்சை சாப்பிட்டால் நல்லது.

* இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தாலும் கூந்தல் நன்கு வளராமல், உதிரும். அதிலும் கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை தினமும் உண்ணும் உணவில் சேர்க்க வேண்டும்.

எனவே இவற்றையெல்லாம் தினமும் உடலில் சேர்த்து கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக நீளமாக வளரும் என்று கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

Story first published: Tuesday, August 7, 2012, 11:48 [IST]
Desktop Bottom Promotion