உங்க முடி ஒல்லியா எலிவால் மாதிரி இருக்கா? அதை அடர்த்தியாக்க வாரம் 2 முறை இதுல ஒன்ன யூஸ் பண்ணுங்க...

Hair Care Tips In Tamil: தற்போது நிறைய பேர் தலைமுடி உதிர்வால் அவதிப்படுகிறார்கள். இப்படி தலைமுடி அதிகம் உதிர்வதால் அடர்த்தி குறைந்து பல பெண்களின் முடி எலிவால் போன்று காணப்படுகிறது.

பொதுவாக தலைமுடியானது மன அழுத்தம், ஹார்மோன் பிரச்சனைகள், மோசமான உணவுப் பழக்கங்கள், தவறான தலைமுடி பராமரிப்பு பொருட்கள், குறிப்பிட்ட மருந்துகள் போன்றவற்றால் உதிரும்.

Hair Care Tips: Things That Make Your Hair Thicker In Tamil

இப்படி தலைமுடி உதிர்வதைத் தடுக்க பலர் விலை அதிகமான ஹேர் ஆயில்கள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு, குறிப்பாக தலைமுடியை அடர்த்தியாக்குவதற்கு நம் வீட்டில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களே நல்ல பலனைத் தரும். இப்போது அந்த பொருட்கள் எவையென்பதையும், எந்த மாதிரி அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதையும் காண்போம்.

முட்டை

முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்துமே தலைமுடியை வலிமையாக்கவும், பளபளப்பாக்கவும் உதவுகின்றன. அதற்கு முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் சிறிது நல்லெண்ணெயை சேர்த்து கலந்து, தலையில் தடவி, நன்கு காய்ந்ததும், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும்.

ஆலிவ் ஆயில்

தலைமுடிக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லாவிட்டால் தான் முடி உதிரத் தொடங்கும். முடி உதிர்வதை ஆரம்பத்திலேயே கவனித்து அதைத் தடுக்க முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தலைமுடி எலி வால் போன்று மாறிவிடும். தலைமுடிக்கு நல்ல சத்துக்கள் கிடைக்க வேண்டுமானால், ஆயில் மசாஜ் தான் அதற்கு சிறந்த வழி.

இந்த மசாஜ் செய்வதற்கு ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்த எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் இந்த எண்ணெய்களை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

வெங்காயம்

வெங்காயச் சாறு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் அடர்த்தியை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தயிரை சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, முடியின் அடர்த்தி அதிகரிக்கத் தொடங்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இவை அனைத்தும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சத்துக்களாகும். எனவே உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

ஆளி விதை

ஆளி விதை தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் என்பது தெரியுமா? அதற்கு ஆளி விதையை நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்த, மறுநாள் காலையில் அதை அடுப்பில் வைத்த, ஜெல் போன்று வரும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குளிர வைத்து, பின் அதை ஸ்கால்ப்பில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, முடி அடர்த்தியாகும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட பெரிதும் உதவி புரியும். அதற்கு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சரிசம அளவில் எடுத்து கலந்து, ஸ்கால்ப்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

தேங்காய் பால்

தேங்காய் பாலில் உள்ள சத்துக்கள், தலைமுடி, சருமம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக தலைமுடி உதிர்வால் அவதிப்படுபவர்கள், தேங்காய் பாலை தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடுவதோடு, தலைமுடியும் நன்கு வளர்ச்சியடையும்.

Desktop Bottom Promotion