கதை சொல்லும் காதோர லோலாக்குகள்!

By Mayura Akilan

சில பெண்கள் அழகாக உடுத்தி இருப்பார்கள். முகத்திற்கு ஏற்ற மேக் அப் போட்டிருப்பார்கள் ஆனால் காதுகளை சரியாக கவனிக்காமல் விட்டிருப்பார்கள். இது மைனஸ் பாயிண்டாகிவிடும். எனவே தினமும் காதுகளை சுத்தப்படுத்துவது அவசியம்.காது அமைப்பில் வித்தியாசம் இருந்தால் அதற்கேற்ப காதணிகள் அணிந்தும் மேக் அப் போட்டும் சரி செய்து கொள்ளலாம். முகத்திற்கு மேக்கப் போடும்போது காதுகளுக்கும் சேர்த்து பவுண்டேஷன், பவுடர் தடவவேண்டும். இல்லாவிட்டால் காதுகள் தனி நிறத்தில் இருக்கும்.

நீளக் காது காதணிகள்

நீளமான காது உள்ளவர்கள் ஃபவுண்டேசன் போட்டு சிறிதாக காட்டலாம். இவ்வாறு நீளக்காது உள்ளவர்களுக்கு விதவிதமான காதணிகளால் அலங்கரிக்கலாம். காதின் கீழ் விளிம்பு அகலமாக இருந்தால் பட்டையாக நிறைய கல்வைத்த பேசரி தோடுகளைப் போடலாம் அழகை அதிகரித்துக் காட்டும்.

சின்னக்காதுக்கு வளையம்

சிறிய காது என்றால் காது மடல்களில் இரண்டு, மூன்று துளை போட்டு சின்னச் சின்ன வளையங்களை மாட்டி, காது விளிம்பில் கல் பதித்த சரம் போன்ற தோடு அல்லது தொங்கட்டான் போடலாம். முகம் குண்டாக இருந்தால் தொங்கட்டான் தேவையில்லை. ஸ்டட் மட்டுமே போடலாம்.கழுத்தில் மெலிதான செயின் மட்டுமே போட்டிருந்தால் காதில் தொங்கல் போடுவது எடுப்பாக காட்டும்.

மனசுக்கு ஏற்ற மாட்டல்

நிறைய தோடுகளை சைடு காதில் குத்திக் கொள்வதைக் காட்டிலும், பட்டன் டைப் அல்லது பிரஸ்ஸிங் டைப் வளையங்களை உபயோகித்தால் பேஷன் மாறும்போது நாமும் வடுக்கள் இல்லாமல் மாறிவிடலாம். சிறு வயதுக்காரர்கள் பார்ட்டி, கல்யாணம் என்று மேக்கப் செய்யும்போது, காதை மறைக்கும் பட்டையான மாட்டல் போடலாம். ஆனால் வயதானவர்களுக்கு இன்விசிபிள் டைப் மாட்டல் தான் பொருந்தும்.அதுவும் கூட பட்டன் போட விருப்பம் இல்லாதவர்களுக்கு ஒரு சாய்ஸ் மட்டுமே. பேஷன் தோடுகள் வாங்கும்போது ஒவ்வாமை, எடை இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

அகலமான முகம்

அகலமான முகம் என்றால் நீள தொங்கட்டான் போடலாம், ஜிமிக்கி பாந்தமாக இருக்கும். காது நீளம் குறைவாக இருந்தால் காதணியின் நீளத்தைக் குறைக்கலாம். காத மடல்களில் அணியும் தோடுகள், குட்டி தொங்கட்டான்கள், வளையங்கள் முக அழகைக் கூட்டும். திருமணம், போன்ற விழாக்களுக்கு செல்லும் போது அகலமான மாட்டல், கல்வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லெஸ் போட்டால் உங்களுக்கு திருஷ்டி படும் போங்கள்

காதையும் கவனிக்கனும்

சிலர் எப்போதும் தோடுகளை அணிந்து கொண்டே, அதனை ரெகுலராக க்ளீன் செய்யாமல் இருப்பார்கள். இதனால் காதுகளில் மற்றும் தோடுகளில் அழுக்கு சேர்வது மட்டுமில்லாமல் காதின் நிறமும் கறுப்படையக்கூடும். இப்படி நேரமில்லை என்று சாக்கு சொல்பவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும்போதாவது தோடுகளை கழற்றி சோப் வாட்டரில் பிரஷ் கொண்டு கழுவி க்ளீன் செய்யலாம். எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குகளினால் ஏற்படும் துர்நாற்றமும் போகும்.

Story first published: Monday, February 6, 2012, 17:31 [IST]
Desktop Bottom Promotion