இந்த அறிகுறிகள் இருப்பவர் உண்மையான மற்றும் நேர்மையான நண்பராக இருப்பார்களாம்...விளக்குகிறார் மருத்துவர் கௌதமன்!

Friendship Day 2024: பெரும்பாலும் நாம் நமக்காக தேர்ந்தெடுக்க கூடிய இரு உறவுகள் வாழ்க்கை துணையும் நண்பர்களும் தான். வாழ்வில் அனைத்து உறவுகளிடமும் சில எதிர்பார்ப்புகளும், மனநெருடல்களும், சார்ந்திருக்கும் தன்மையும் இருக்கும். உதாரணமாக குழந்தைகள் பெற்றோரை சார்ந்தோ, கணவன் மனைவி ஒருவரை ஒருவர் சார்ந்தோ, வயதில் முதியோர் அவர்கள் பிள்ளைகள் என ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் சமூக நிலையில் எதையும் சாராது நமது சில கடினமாக சூழலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மை சுற்றி இருக்கும் ஒரு உறவே நட்பு.

Friendship Day 2024 Exclusive Interview With Doctor Gowthaman Regarding Friends

நம்மை சுற்றி இருக்கும் அண்டை வீடுகளில் இருப்பவர்கள், பள்ளி கல்லூரிகளில் உடன் படித்தவர்கள், நம் அன்றாட வாழ்வில் சந்திக்க கூடிய நபர்கள், அல்லது அலுவலகத்தில் நம்மோடு பழகுபவர்கள் அனைவரும் நமக்கு நண்பர்களா என்றால், இல்லை. அதில் நமக்கு மகிழ்ச்சியான சூழலை தருபவர்களையே நாம் அதிகம் விரும்பி செல்வோம். அவர்களுடனான நட்பின் வட்டம் விரிவடையும். அவர்களில் உங்களுக்கு உண்மையான நண்பர்களாக இருப்பவர்கள் ஒரு சிலரே. அவர்களை எப்படி அடையாளம் காண்பது என்பதை பற்றி உளவியல் நிபுணர் கெளதமன் விளக்குகிறார்.

நம்பிக்கை

நட்பில் முதலில் இருக்க வேண்டியது நம்பிக்கை. முகநக நட்பது நட்பன்று என்னும் வள்ளுவரின் குறளின் படி, பார்க்கும் போது மட்டும் நம்மிடம் சிரித்து பேசி, மனதளவில் மகிழ்ச்சி இல்லாமல் பொய்யாய் பழகுபவர்களிடம் நம்பிக்கை என்ற ஒன்றை நம்மால் பெற முடியாது. இப்படி பொய்யாய் பழகுபவர்களிடம் ஏற்படும் நட்பை விடுத்து, அவர் நமக்கு தெரிந்தவர் எனும் நிலையில் அந்த உறவை தொடர்வதே சிறப்பு.

நேர்மை

மனதில் நினைப்பதை நேரடியாக பேசுபவர், நீங்கள் கருத்துக்களை கேட்கும் போது எந்த தயக்கமும் இன்றி உண்மையை பேசுபவராகவும் மற்றும் உங்கள் கருத்துக்களை கேட்டு தவறாக நினைக்காமல் இருப்பவராகவும் இருக்க வேண்டும். இங்கு நீங்களும் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது, நாம் என்ன கொடுக்கிறோமோ, அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும். அவர் நீங்கள் விரும்புவதை பற்றி மட்டும் பேசாமல், உங்களுக்கு நல்லது எதுவோ அதை எடுத்துரைக்க கூடியவராக இருக்க வேண்டும்.

ஆதரவு

ஆதரவளிக்க கூடிய நண்பர் எப்போதும், தனக்கு சரி என தோன்றாத விஷயங்களிலும் உங்களுக்கு தடையாக இல்லாமல், உங்கள் முடிவிற்காக துணை நிற்பவர். இதில் பணம், பொருள் போன்றவற்றின் அடிப்படையில் இல்லாமல், உங்கள் செயலுக்கு நம்பிக்கை கொடுத்து உங்களுக்கு துணைநிற்பது. இதை தான் திருவள்ளுவர், "நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்" என்னும் திருக்குறளில், மனவேறுபாடு இல்லாமல் தன்னால் முடிந்த வழிகளிலெல்லாம் துணையாக நின்று நண்பனை காப்பாற்றுவது தான் நட்பின் சிறப்பாகும் என்று எடுத்துரைக்கிறார்.

மரியாதை

மரியாதை என்றவுடன், ஐயா என்று அழைக்க வேண்டுமா என்று கேட்க வேண்டாம். நீங்கள் உங்கள் இயல்பான வசவு சொற்ககளிலேயே உங்கள் நண்பரை அழைத்து கொள்ளலாம். இங்கு மரியாதை என்பது மனதளவில் இருக்க வேண்டிய ஒன்று. உங்கள் மீது அவருக்கு நன்மதிப்பு இருக்க வேண்டும். மாறாக, உங்கள் நண்பர் உங்களை இரண்டாம் பச்சமாக பார்க்கிறார் என்றால், அது சிறப்பான நட்பாக இருக்காது. அதே உங்களுக்கு உங்கள் நண்பரை பற்றிய நல்ல அபிமானம் இருக்க வேண்டும்.

சண்டைகள்

சண்டைகள் என்ற உடன் கட்டைகளை எடுத்து கொண்டு நண்பர்களை தாக்குவது அல்ல. உலகில் உள்ள எல்லா உறவுகளிலும் சண்டை என்பது பொதுவான ஒன்று. சண்டையில் ஏற்படும் ஆரோக்கியமான வாக்குவாதங்கள் ஒரு சிறந்த புரிதலை ஏற்படுத்தும். பிரச்சனை வரும் என்றாலும், தனது கருத்துக்களை சொல்வது. இப்படி செய்யாமல் அமைதியாக இருப்பது, உங்களிடம் கருத்துக்களை பகிர விருப்பாமல் இருக்கலாம், அல்லது உங்களிடம் சொல்வதால் பயனில்லை என்று அமைதி காப்பவராக இருக்கலாம். இது எது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் நட்பை தொடருங்கள்.

உங்கள் வளர்ச்சி

உங்கள் வளர்ச்சி என்ற உடன், வசதி அதிகமுள்ளவரால் உங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் அல்ல. அவர்களின் அறிவாற்றல் மற்றும் செயல்திறனால், உங்கள் செயல்கள் மற்றும் குணங்களில் ஏற்படும் மாற்றங்கள். இதையே வள்ளுவர் "நிறைநீர நீரவர் கேண்மை " என்னும் குறளில், நல்ல அறிவுள்ள நபருடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாக துவங்கி முழுநிலவாக வளரும் என்றும், நல்ல குணம் இல்லாதவரோடு கொள்ளும் நட்பு முழுமதிபோல் இருந்தாலும் நாளடைவில் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும் என்கிறார். உங்கள் நண்பர் உங்கள் வளர்ச்சிக்கு துணை நிற்பார். அல்லது நீங்கள் நல்ல நண்பராக அவருக்கு துணை நிற்க வேண்டும்.

மகிழ்ச்சியான தருணங்கள்

உங்கள் நண்பர்களுடன் இருக்கும் போது, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் நினைப்பதை சுதந்திரமாக செய்யவோ அல்லது பேசவோ முடிய வேண்டும். உங்கள் நண்பரும் இதை போல், உங்களிடம் உணர வேண்டும். இதுவே நல்ல உறவை வளர்க்கும்.

மேற்சொன்ன இந்த அளவுகோள்களை வைத்து நண்பர்களை கண்டறிவது கட்டாயம் அல்ல. ஆனால் இது போன்ற நண்பர்கள் உடன் இருப்பது உங்கள் முன்னேற்ற பாதைக்கு இழுத்து செல்லும். முடிந்த வரை உங்கள் நெருங்கிய நண்பர்களை இதுபோல் அமைத்து கொள்ள முயற்சியுங்கள். உங்கள் நண்பர் இப்படி இல்லை என்றால், உங்களால் முடியும் என்றால், நீங்கள் நல்ல நண்பராக இருந்து அவர்களை மாற்றுங்கள்.

சந்தானம் ஒரு படத்தில் கூறுவார் ' நண்பன்ல ஏதுமா நல்ல நண்பன், கெட்ட நண்பன். நண்பனாலே நல்லவன்தான்'. இதைதான் நமது உளவியல் நிபுணரும் கூறுகிறார்.

Story first published: Sunday, August 4, 2024, 8:30 [IST]
Desktop Bottom Promotion