மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

By Mayura Akilan

10 Things She Needs From Her Husband
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விருப்பங்கள் தேவைகள் இருக்கும். கணவனிடம் மனைவிக்கோ, மனைவியிடம் கணவனுக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தன்னுடைய செயல்களை பாராட்ட வேண்டும். தான் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்ற எண்ணமும் மனைவிக்கு இருக்குமாம். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று நிபுணர்கள் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் படியுங்களேன்.

புண்படுத்தாதீங்க

மனைவியிடம் எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடாதாம். மனது புண்படும்படி பேசக்கூடாதாம். அன்பாய் பிரியமாய் நடந்து கொள்ள வேண்டுமாம். முக்கியமாக பிறர் முன்னிலையில் மனைவியை திட்டக்கூடாதாம்.

விட்டுக்கொடுக்காதீங்க

தன்னுடைய சொந்த பந்தங்கள் அனைவரையும் விட்டு விட்டு கணவரை நம்பி மட்டுமே மனைவி வந்திருக்கிறாள். எனவே மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து பேசக்கூடாதாம். முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டிற்கோ செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்துதான் போகவேண்டுமாம்.

குறை சொல்லதீங்க

மனைவி செய்யும் சமையலை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. முக்கியமாக அம்மாவின், சகோதரியின் சமையலோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாதாம். புதிதாக சில அயிட்டங்களை மனைவி செய்தால் அதை ஆஹோ ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சின்னதாக பாராட்டவேண்டுமாம்.

மனம் விட்டுப் பேசுங்க

பணம் அவசியம்தான் அதற்காக குடும்பத்தை கவனிக்காமல் பணம் மட்டுமே குறிக்கோள் என்று பணத்தின் பின்னால் ஓடக்கூடாதாம். குடும்பம், குழந்தை இவற்றிர்க்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமாம். பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது மனம் விட்டு பேசவேண்டுமாம். மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

ஆலோசனை கேளுங்க

எந்த ஒரு விசயமென்றாலும் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மனைவி சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த விசயத்தையும் ஒளிவு மறைவு இன்றி மனைவியிடம் கூறவேண்டுமாம். அதேசமயம் அடுத்த பெண்ணைப் பற்றி மனைவியிடம் பாராட்டக்கூடாதாம்.

நம்பிக்கை வைங்க

எந்த ஒரு விசயத்தையும் மனைவியை நம்பி கூறவேண்டுமாம். அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. மனைவியின் சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டுமாம். மனைவிக்கு உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டுமாம். அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாராம். இதுபோல சில நாட்கள் நடந்து பாருங்களேன் அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கத் தொடங்கிவிடுவார்.

Story first published: Tuesday, June 12, 2012, 14:26 [IST]
Desktop Bottom Promotion