அடிக்கடி அவுட்டிங் போங்க அன்பு அதிகரிக்கும்– ஆய்வில் தகவல்

By Mayura Akilan

Couple’s day out
'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பது பழமொழி மட்டுமல்ல இன்றைக்கு பலரது வாழ்க்கையில் அது உண்மையாகி வருகிறது. திருமணமான புதிதில் உற்சாகமாக வாழ்க்கையை தொடங்குபவர்கள் நாளடைவில் குழந்தை, பணிச்சுமை என பல்வேறுவகையான அழுத்தங்களில் சிக்கி சந்தோசமான இல்லற வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர்.

எனவே தம்பதியரின் வாழ்க்கையில் தடங்கல் இல்லாத சந்தோசம் நீடிக்க அடிக்கடி அவுட்டிங் போக வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றும் இதை உறுதிபடுத்தியுள்ளது. திருமணமாகி நீண்ட நாட்கள் ஆன பின்னரும் தம்பதியரிடையே அன்பு நீடிக்க வேண்டுமா? அடிக்கடி சினிமா, பீச், பார்க் என்று அவுட்டிங் போங்க உங்க தாம்பத்ய வாழ்க்கை உற்சாகமாகும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.

தம்பதியரிடையே உள்ள உறவு பரிமாற்றம், குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சமீபத்தில் அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உற்சாக காதல் உணர்வு

திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்த பின்னும் உற்சாகத்துடன் உறவில் ஈடுபடுவதாக பெரும்பாலான தம்பதியர் தெரிவித்துள்ளனர். தங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்னரும் கணவருடன் சினிமா, பார்க் என அவுட்டிங் செல்வது தங்களுக்கு உற்சாகத்தையும், இளமையையும், காதல் உணர்வுகளையும் புதுப்பிக்கின்றது என்றும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.

திருமண வாழ்க்கையில் போரடிக்காமல் இருக்கவும் சுவாரஸ்யத்தை தக்கவைக்கவும் வாரம் ஒருமுறையாவது தம்பதியர் தனியாக ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்ல வேண்டும். அதேபோல் சுற்றுலா, பார்ட்டி என எங்காவது தனியாக செல்லலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அப்படி செல்வதன் மூலம் அன்னியோன்யம் அதிகரிப்பதோடு தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறையாமல் இருக்கும் என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

மகிழ்ச்சி பரிமாற்றம்

தாம்பத்ய உறவு மட்டுமல்லாது சிறு, சிறு அன்பு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதால் பரஸ்பர அன்பு விலகாமல் நீடிக்கும் என்பதும் பல தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

வளர்ந்த குழந்தைகள் இருந்த போதிலும், தம்பதியர் தங்களின் மகிழ்ச்சி பாதிக்காதவாறு வாழ்க்கையை வாழலாம். அதேபோல் குழந்தைகளுக்கும் தேவையான சுதந்திரத்தை அளிப்பதன் மூலம் அவர்களும் பெற்றோர்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.

மணமுறிவை தவிர்க்கலாம்

தாம்பத்ய உறவு தொடர்பாக பல குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை தாம்பத்யம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் மட்டுமே மணமுறிவு ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் திருப்தியில்லாத உறவின் மூலம் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன.

மணவாழ்க்கை என்பது மணம் வீச வேண்டுமே தவிர, மனதை காயப்படுத்திவிடக்கூடாது. எனவே தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி புரிந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடரலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Sunday, March 11, 2012, 12:39 [IST]
Desktop Bottom Promotion