பன்னீரும், பட்டாணியும் இருந்தா.. நைட் சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ்ஷை செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..

Posted By:

White Paneer Peas Gravy Recipe In Tamil: இரவு நேரத்தில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி செய்வீர்களா?அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ்ஷை தான் திரும்ப திரும்ப செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான சைடு டிஷ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பன்னீரும், பட்டாணியும் இருந்தால், அதைக் கொண்டு பன்னீர் பட்டாணி பால்கறியை செய்யுங்கள்.

இந்த பன்னீர் பட்டாணி பால்கறி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பரோட்டாவுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது ஹோட்டல்களில் கொடுக்கப்படும் க்ரீமி பன்னீர் கிரேவி போன்று இருப்பதால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

White Paneer Peas Gravy How To Make a Paneer Peas Gravy Recipe

உங்களுக்கு பன்னீர் பட்டாணி பால்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பட்டாணி பால்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* வேக வைத்த பச்சை பட்டாணி - 100 கிராம்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* முந்திரி - 15
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* குருமா மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* ஃபுல் க்ரீம் மில்க் - 100 மிலி (காய்ச்சி ஆற வைத்தது)
* ஏலக்காய் - 3
* பட்டை - 1 இன்ச்
* பிரியாணி இலை - 2
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* வெண்ணெய் அல்லது எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 100 மிலி நீரை ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் ஊற வைத்த முந்திரியை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். ஒருவேளை அதில் நீர் அதிகமாக இருந்தால், வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
* பின் மிக்சர் ஜாரில் குளிர வைத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் பாதி பாலை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அரைத்த விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் குருமா மசாலாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் மீதமுள்ள பாலை ஊற்றி கிளறிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பன்னீர் மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கசூரி மெத்தியை சேர்த்து கிளறினால், சுவையான பன்னீர் பட்டாணி பால்கறி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 2, 2025, 20:12 [IST]
Desktop Bottom Promotion