கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழியும், பீர்க்கங்காயும் வைச்சு இப்படி குழம்பு செஞ்சு பாருங்க..அட்டகாசமா இருக்கும்

Posted By:

Village Style Nattukozhi Kulambu Recipe in Tamil: காயும் கறியும் வேறுவேறு என்றாலும் நாம் காய்கறிகள் என்று தான் சொல்வோம். வேட்டையாடி மனிதன் முதலில் சாப்பிட்ட அசைவ உணவு தான் கறி. அவனுக்கு மரம் மற்றும் செடிகளில் இருந்து உணவு பெறப்பட்ட போது அதை மரக்கறி என்று அழைத்தான்.

அதாவது தாவரத்தின் ஒரு பகுதியில் இருந்து கிடைக்கும் கறி போன்ற உணவு பொருள். இது தான் காலப்போக்கில் காய்கறி என்று மருவியது. சரி வாங்க நாம இன்னைக்கு கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி மற்றும் பீர்க்கங்காய் வைத்து சூப்பரான நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்யுறதுனு பார்க்கலாம்.

Village Style Nattukozhi Kulambu Recipe

தேவையான பொருள்கள்:

- நாட்டுக்கோழிக்கறி - ½ கிலோ
- பீர்க்கங்காய் - 1
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- இஞ்சி - சிறிதளவு (1 இன்ச் அளவு)
- பூண்டு - 12 அல்லது 15 பல்
- தனியா தூள் - 2 டீ ஸ்பூன்
- கறிமசால் தூள் - 2 டீ ஸ்பூன்
- சிக்கன் மசாலா- 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - சிறிது

அரைக்க:

- தேங்காய் - ½ மூடி
- சோம்பு - ¼ டீ ஸ்பூன்

தாளிக்க:

- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- பட்டை - 2
- கிராம்பு - 2
- பிரியாணி இலை - 1

செய்முறை:

- கோழி கறியை இரண்டு முறை தண்ணீரில் அலசி கடைசியாக மஞ்சள் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.

- பீர்க்கங்காயை நன்றாக கழுவி விட்டு தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். பின் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

- பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து, வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி, அதனுடன் தோல் உரித்த பூண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

- தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து, அதனுடன் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணய் ஊற்றி காயவிட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

- பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

- அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

- பின் சுத்தம் செய்த கோழி கறியை சேர்த்து நன்றாக கிளறி, கோழிகறி வெந்து தண்ணீர் வரும் போது கறிமசால் தூள், மஞ்சள்தூள், மற்றும் தனியாதூள் சேர்த்து கிளறவும்.

- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.

- நறுக்கிய பீர்க்கங்காய் மற்றும் சிக்கன் மசாலாவை கோழிகறி முக்கால் பதம் வெந்ததும் சேர்த்து கிளறி வேகவிடவும்.

- காயும், கறியும் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்கவிட்டு கிரேவி போல் கெட்டியானதும் கறிவேப்பிலை, மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான காய், கறி ரெடி.

[ of 5 - Users]
Story first published: Sunday, July 27, 2025, 14:30 [IST]
Desktop Bottom Promotion