மணமணக்கும்.. ருசியான... கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு

Posted By:

Village Style Chicken Kuzhambu: நீங்கள் கோழி பிரியரா? அதுவும் நாட்டுக்கோழி உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? இதுவரை நாட்டுக்கோழியை ஹோட்டல்களில் தான் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? அந்த நாட்டுக்கோழியை வீட்டில் எப்படி சுவையாக சமைப்பது என்று தெரியாதா?

அப்படியானால் இந்த வாரம் நாட்டுக்கோழியை வாங்கி கிராமத்து நாட்டுக்கோழி குழம்பை வீட்டில் செய்து, அனைவரையும் அசத்துங்கள். இந்த குழம்பிற்கு மசாலாக்கள் அனைத்துமே நற்பதமாக தயாரித்து சேர்க்க வேண்டும்.

Village Style Chicken Kuzhambu Recipe In Tamil

இந்த நாட்டுக்கோழி குழம்பு சாதம், இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நாட்டுக்கோழி - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்

முதலில் அரைப்பதற்கு...

* தேங்காய் - 1 கப் (துருவியது)

இரண்டாவதாக அரைப்பதற்கு...

* சின்ன வெங்காயம் - 500 கிராம்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு கையளவு

பொடிப்பதற்கு...

* பட்டை - 4 துண்டு
* சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 10
* கிராம்பு - 10

குழம்பிற்கு...

* எண்ணெய் - 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* மல்லித் தூள்- 3 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - 1 கையளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் நாட்டுக்கோழியை நன்கு நீரில் கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் துருவிய தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சின்ன வெங்காயம், சீரகம், கறிவேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு அதையும் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பொடிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஈரமில்லாத மிக்சர் ஜரில் போட்டு கொரகொரவென்று பொடித்துக் கொள்ள வேண்டும். வீட்டில் அம்மி இருந்தால், அதில் கூட இடித்துக் கொள்ளலாம்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடித்த பொடியை சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் குக்கரில் வேக வைத்துள்ள சிக்கனை நீருடன் சேர்த்து கிளற வேண்டும்.
* பின்பு அரைத்து சின்ன வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து மல்லித் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, தேங்காய் விழுதையும் சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி மிதமான தீயில் வைத்து, எண்ணெய் மிதக்கும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கரம் மசாலாவைத் தூவி கிளறி விட வேண்டும்.
* இறுதியாக மற்றொரு அடுப்பில், ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு தயார்.

குறிப்பு:

* நீங்கள் பிராய்லர் கோழியை பயன்படுத்தினால், சிக்கனை குக்கரில் வேக வைக்கும் போது 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Saturday, July 29, 2023, 12:50 [IST]
Desktop Bottom Promotion