அடிக்குற வெயிலுக்கு வெண்டைக்காய் வெச்சு இப்படி மோர் குழம்பு செய்யுங்க.. குளுகுளுன்னு இதமா இருக்கும்...

Posted By:

Vendakkai Mor kuzhambu Recipe In Tamil: அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது. கொளுத்தும் வெயிலால் நிறைய பேர் உடல் சூடு பிரச்சனையை சந்திப்பார்கள். மேலும் வெயில் காலத்தில் காரசாரமாக சாப்பிடவும் பிடிக்காது. இந்நிலையில் சற்று காரம் குறைவாகவும், அதே சமயம் ருசியாகவும் ஏதாவது செய்து சாப்பிட நினைக்கிறீர்களா?

வீட்டில் வெண்டைக்காயும், தயிரும் இருந்தால், அவற்றைக் கொண்டு மோர் குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு டக்கென்று சமைக்கக்கூடிய வகையில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். வெயில் காலத்தில் இந்த குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, அமிர்தமாக இருக்கும்.

Vendakkai Mor kuzhambu How To Make a Lady s Finger Mor Kuzhambu Recipe

உங்களுக்கு வெண்டைக்காய் மோர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெண்டைக்காய் - 200 கிராம்
* தயிர் - 1/2 லிட்டர்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

* அரிசி - 1/2 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4
* கடுகு - 1/2
* உளுத்தம் பருப்பு - 1/2
* வரமிளகாய் - 3 (விதைகளை நீக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4
* பெருங்காயத் தூள் - 1/4
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் 1/2 டேபிள் ஸ்பூன் அரிசி மற்றும் 1/4 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை எடுத்து நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் சுத்தமான நீரை ஊற்றி, அத்துடன் 3 வரமிளகாய், 3 பச்சை மிளகாய் சேர்த்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் வெண்டைக்காயை நீரில் கழுவிவிட்டு, துணியால் துடைத்துவிட்டு, பின் துண்டுகளாக்கி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி வைக்கும் போது, வெண்டைக்காயின் வழுவழுப்பு சற்று குறையும்.
* அதன் பின் 1/2 லிட்டர் தயிரை எடுத்து, அதை நன்கு கட்டிகளின்றி அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசி, பருப்பு வரமிளகாய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கப்பட்ட வெண்டைக்காயை சேர்த்து முக்கால்வாசி வேகும் அளவில் வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, விதைகளை நீக்கிய வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கைவிடாமல் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து கிளறி, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி வெண்டைக்காய் நன்கு வேகும் அளவில் 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் அடித்து வைத்துள்ள தயிரை ஊற்றி கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, நுரை கட்ட தொடங்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, May 5, 2025, 14:28 [IST]
Desktop Bottom Promotion