சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்!

Posted By:

Hotel Style Vellai Kurma Recipe In Tamil: பொதுவாக ஆடிப்பெருக்கு போன்ற நல்ல நாளில் வீட்டில் காலை டிபனாக பூரி செய்யும் வழக்கம் உள்ளதா? அந்த பூரிக்கு எப்போதும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?

Vellai Kurma How To Make Hotel Vellai Kurma For Poori Chapati

அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோரை காய்கறிகளை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த குருமா பூரியுடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த பக்குவத்தில் காய்கறிகளைக் கொண்டு குருமா செய்யும் போது, காய்கறிகளை சாப்பிடாதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - சிறிய துண்டு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 15
* தண்ணீர் - சிறிது

வேக வைப்பதற்கு...

* பச்சை பட்டாணி - 1 கையளவு
* கேரட் - 1 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 7-8 (நறுக்கியது)
* காலிஃப்ளவர் - சிறிது (நறுக்கியது)

குருமா தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* பிரியாணி இலை - 2
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* அரைத்த தேங்காய் விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த காய்கறிகள்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு இட்லி தட்டில் பச்சை பட்டாணி, நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் சுடுநீரில் போட்டு எடுத்த காலிப்ளவரை வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, August 3, 2026, 6:39 [IST]
Desktop Bottom Promotion