தவா பன்னீர் மசாலா

By Maha

இரவில் சப்பாத்தி சாப்பிடுபவரா? உங்களுக்கு பன்னீர் பிடிக்குமா? அப்படியெனில் இன்று ஓர் வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவையுங்கள். அதுவும் 20 நிமிடத்தில் தயாராகக்கூடியவாறான ஓர் எளிய ரெசிபி. அது தான் தவா பன்னீர் மசாலா. மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த தவா பன்னீர் மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து இன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 1 டேபிள் ஸ்பூன் (அல்லது) கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன் + மாங்காய் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தயக்கீரை - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.

பின் அதில் வெங்காயம், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, வெண்ணெய் தனியாக பிரியும் வரை கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, குடைமிளகாய் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, உலர்ந்த வெந்தயக்கீரையை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தவா பன்னீர் மசாலா ரெடி!!!

Desktop Bottom Promotion