பப்பாளி கூட்டு

By Maha

தினமும் சிறிது பப்பாளி சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் நீங்கள் வாங்கிய பப்பாளி பழுக்காமல் காயாக இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் கூட்டு செய்து சாப்பிடலாம். இந்த கூட்டு வித்தியாசமான சுவையில், விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த பப்பாளி கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Papaya Kootu Recipe

தேவையான பொருட்கள்:

பழுக்காத பப்பாளி - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
கடலைப்பருப்பு - 3/4 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

தேங்காய் - 3/4 கப்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, கடலைப்பருப்பை கழுவிப் போட்டு, 15-20 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். கடலைப்பருப்பு ஓரளவு வெந்ததும், அதில் பப்பாளியை சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, பப்பாளியுடன் சேர்த்து நன்கு பிரட்டி, 5-8 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பப்பாளி கலவையுடன் சேர்த்து கலந்து இறக்கினால், பப்பாளி கூட்டு ரெடி!!!

Image Courtesy: yummytummyaarthi

Story first published: Monday, August 17, 2015, 13:43 [IST]
Desktop Bottom Promotion